பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை
சார்லஸ் மன்னர் மற்றும் வேல்ஸ் இளவரசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணம் கோவிட் தடுப்பூசி என அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் ஆலோசகர் ஒருவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான ஆய்வுகள்
ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் ஆலோசகரான இதய நோய் நிபுணர் டாக்டர் அசீம் மல்ஹோத்ரா என்பவரே பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார்.
தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்தைக் கொண்ட டாக்டர் மல்ஹோத்ரா, இதுவரை நூற்றுக்கணக்கான ஆய்வுகள் கோவிட் தடுப்பூசியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.
கோவிட் தடுப்பூசி புற்றுநோய்க்கான ஆபத்து காரணியாக இருக்கலாம் என தெரிவித்துள்ள டாக்டர் மல்ஹோத்ரா, பல மருத்துவர்களும் இதையே உணர்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பிரித்தானிய பேராசிரியர் ஆங்கஸ் டால்கிலீஷ் என்பவரின் கருத்தை குறிப்பிட்டு, பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்களின் புற்றுநோய்க்கு கோவிட் தடுப்பூசிகளே முதன்மையான காரணிகளாக இருக்க வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரி முதல் மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து வருகிறார், அதே நேரத்தில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சிகிச்சை முடித்து பொது வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.
ஏற்கனவே கோவிட் தடுப்பூசிக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு கல்வியாளர்கள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அரசாங்க அமைப்புகளான CDC, FDA, NCI உள்ளிட்டவை அந்த கூற்றுகளை மறுத்துள்ளதுடன், கோவிட் தடுப்பூசி புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அறிவித்துள்ளது.
தீங்கு விளைவிக்கும்
இந்த நிலையில் பிரித்தானியாவில் ஒரு அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய டாக்டர் மல்ஹோத்ரா, கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உண்மையான வைரஸை விட தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு அதிகம் என்றார்.
மட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பானது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாகவே உலக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்னும் சில மாதங்களுக்குள் அமெரிக்க சந்தையில் இருந்து மொத்த கோவிட் தடுப்பூசிகளையும் நீக்க வேண்டும் என்று டாக்டர் மல்ஹோத்ரா ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கடந்த மாதம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு கென்னடி ஜூனியரும் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |