இளவரசர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் கிரிமினல் வழக்குப் பதிவு: எதற்காக?
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானுக்கு எதிராக,ஜேர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித இனத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக சல்மான் மீதும், சவுதி உயர் அதிகாரிகள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
500 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் சவுதி அரேபியாவில் சிறையிலடைக்கப்பட்டுள்ள 34 பத்திரிகையாளர்கள், மற்றும் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி உட்பட பத்திரிகையாளர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவது முதாலான விடயங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
அந்த பத்திரிகையாளர்கள் சட்டவிரோதமாக சித்திரவதைக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கொலை செய்யவும் பட்டுள்ளார்கள் என்கிறது அந்த ஆவணம்.
இந்த குற்றச்சாட்டு ஜேர்மனியில் பதிவு செய்யப்படுள்ளதன் காரணம், ஜேர்மனியைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் இழைக்கப்படும் குற்றங்களுக்கும் நீதி வழங்க ஜேர்மன் சட்டத்தில் வழிவகை உள்ளதால்தான்.
பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை சவுதி இளவரசரின் ஒப்புதலின்பேரில்தான் நடைபெற்றது என்பதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியைக் கேட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் காதலியான Hatice Cengiz, உண்மை வெளிவந்துள்ளது, ஆனால் அது மட்டும் போதாது, கொலைகாரனை தப்பவிடக்கூடாது, அப்படி விட்டுவிட்டால், இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கும் என்று கூறியுள்ளார்.