இஸ்ரேலின் அந்த முடிவு... கடுமையாக விமர்சித்த பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா
The decision of the Israeli military authorities: குற்றவியல் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் முடிவுக்கு கடும் விமர்சனம்.
காஸாவில் தொண்டு நிறுவன வாகனங்களின் அணிவகுப்பு மீது ஏப்ரல் 2024-இல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் குறித்துக் குற்றவியல் விசாரணை எதையும் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெட்கங்கெட்ட செயல் என்று விமர்சித்துள்ளன.

இஸ்ரேலின் அந்தத் தாக்குதல், அமெரிக்காவைச் சேர்ந்த 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (WCK) அமைப்பைச் சேர்ந்த ஏழு மனிதாபிமானப் பணியாளர்களைக் கொன்றன.
உலகளாவிய அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலில், மூன்று நாடுகளைச் சேர்ந்த WCK ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்த பொறுப்புக்கூறல் இல்லாத எண்ணற்ற சம்பவங்களில் 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (World Central Kitchen) மீதான தாக்குதலும் ஒன்று என்று அந்த மூன்று நாடுகளின் கூட்டறிக்கை பதிவு செய்துள்ளது.
மேலும், கொல்லப்பட்டவர்கள் சார்பாக இஸ்ரேலிடம் இருந்து தொடர்ந்து பதில்களைத் தேடுவோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். காஸாவில், மிக ஆபத்தான சூழலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கடும் அவசியத்தில் உள்ள பொதுமக்களுக்கு உதவ மனிதாபிமானப் பணியாளர்கள் அயராது தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.
இருப்பினும், நிலையற்ற போர்நிறுத்தம் நிலவினாலும், 2025-ஆம் ஆண்டில் 186 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்கு காஸா தொடர்ந்து மிகவும் ஆபத்தான இடமாகவே உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, போலந்து அரசாங்கம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகக் கூறியதுடன், இந்தச் சம்பவம் குறித்த போலந்து விசாரணைகளுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வியாழக்கிழமையன்று அழைப்பு விடுத்தது.
லண்டனில் வெளிவிவகார அலுவலகம் தெரிவிக்கையில், தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பிரித்தானியக் குடிமக்களான ஜான் சாப்மேன், ஜேம்ஸ் ஹென்டர்சன் மற்றும் ஜேம்ஸ் கிர்பி ஆகியோரின் குடும்பங்களுக்காக பிரித்தானியா பேரதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தது.
போர்க்காலம் முழுவதும் காஸாவில் உணவு விநியோகித்து வந்த WCK அமைப்பு, அந்தப் பயங்கரமான தாக்குதலுக்குப் பிறகு தங்கள் வாகனங்களின் நடமாட்டம் குறித்து இராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவே கூறியது.
மட்டுமின்றி, தங்களின் வாகனங்களில், வானிலிருந்து பார்க்கும்போது தெரியும் வகையில் குழுவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், வாகனங்களில் இருந்த பல நபர்களை ஆயுதம் ஏந்திய ஹமாஸ் படையினர் எனத் தவறாகக் கருதியதாகவும், WCK வாகன அணிவகுப்பு முன்னதாக ஒருங்கிணைக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) புதன்கிழமை தெரிவித்தது.
மேலும், தளபதிகளின் முடிவுகள் குற்றவியல் ரீதியான முறைகேடு குறித்த நியாயமான சந்தேகத்தை எழுப்பவில்லை என்று IDF முடிவு செய்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |