அது நடந்தால் இரத்தக்களரியாகிவிடும்... அமெரிக்காவிற்கு கடும் மிரட்டல் விடுத்த நாடு
அமெரிக்கா தங்கள் நாடு மீது தாக்குதல் தொடுக்கும் என்றால் அது இரத்தக்களரிக்கு வழி வகுக்கும் என கியூபாவின் தலைவர் கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
பரம எதிரிகளான இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கருவூலத்துறை கியூபாவின் முக்கிய உளவு நிறுவனம் மற்றும் அதன் உயர்மட்டத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை கியூபா பெற்றுள்ளதாகவும், அவற்றை அமெரிக்க இலக்குகளுக்கு எதிராகப் பயன்படுத்த ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்க செய்தித் தளமான ஆக்சியோஸ் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து,
கியூபாவின் ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல், எதிரிகளிடம் இருந்து தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்வதற்கான கியூபாவின் உரிமையை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார்.
கியூபாவின் கம்யூனிச அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கிழக்கு கியூபாவில் உள்ள குவாண்டநாமோ வளைகுடாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தளம், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மற்றும் ஒருவேளை புளோரிடா மீதும் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவது குறித்து கியூபா பரிசீலித்து வருவதாக, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி தியாஸ்-கானெல், கியூபா, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும், அமெரிக்காவின் தாக்குதல் கணக்கிட முடியாத விளைவுகளுடன் ஒரு ரத்தக் களரியைத் தூண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

கியூபா இராணுவ ட்ரோன்களைக் குவித்து வைத்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை, ஆனால் ஒரு இராணுவத் தாக்குதலுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ள கியூபாவிற்கு முழுமையான மற்றும் நியாயமான உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
தோற்கடிக்கப்பட்டனர்
அத்துடன், அமெரிக்காவிற்கான கியூபா தூதரும் இதே கருத்தையே அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். எவரேனும் கியூபாவை ஆக்கிரமிக்க முயன்றால், கியூபா திருப்பித் தாக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று எர்னஸ்டோ சோபெரோன் குஸ்மான் நியூயார்க்கில் AFPயிடம் கூறினார்.
60களில், அவர்கள் (அமெரிக்கா) கியூபா மீது படையெடுக்க முயன்று தோற்கடிக்கப்பட்டனர். நிச்சயமாக, இது ஒரு வேறுபட்ட சூழ்நிலை என்று எல்லோரும் சொல்லலாம். ஆம், அது அப்படித்தான். ஆனால் கியூபா மக்களின் மனவுறுதி மாறவில்லை என குஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.
திங்களன்று ட்ரம்ப் நிர்வாகம், கியூபாவின் உளவுத்துறை மற்றும் அந்நாட்டின் தகவல் தொடர்பு, எரிசக்தி, நீதித்துறை அமைச்சர்கள் உட்பட ஒன்பது கியூப நாட்டினர் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து, கரீபியன் தீவு நாடான கியூபா மீதான அழுத்தத்தை அதிகரித்தது.

ஜனவரி மாதம் முதல் அமெரிக்கா கியூபா மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. அதே மாதம் வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் செய்ததைப் போலவே, கியூபாவின் தலைமையைக் கவிழ்ப்பது குறித்து ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார்.
இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகம், கியூபா மீதான அரசியல் நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கில், மறைந்த புரட்சிகரத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் 94 வயதான சகோதரரான ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |