சிலிர்த்தெழுந்த இந்திய அணி... 2வது இன்னிங்ஸில் அபாரம்: தப்புக் கணக்கு போட்ட இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது.
இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
99 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. 3ம் நாளான இன்று சிறிது நேரம் தாக்குப் பிடித்த கேஎல் ராகுல் 46 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா சதம் விளாசினர். ரோகித் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த புஜாராவும் அரைசதம் விளாசினார். ரோகித் சர்மா 127 ஓட்டங்கள் எடுத்து இருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் புஜாராவும் 61 ஓட்டங்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்த நிலையில், அணித் தலைவர் கோஹ்லியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்திக்கொள்ளப்பட்டது.
3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. விராட் கோஹ்லி 22 ஓட்டங்களிலும் ஜடேஜா 9 ஓட்டங்களிலும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி 171 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 தினங்கள் எஞ்சியுள்ளதால், இந்தப் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.