சென்னையை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி!
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 50-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், டூப்ளஸிஸ் களமிறங்கினர்.
இருவரையும் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் டூப்ளஸிஸ் 10 ஓட்டங்களிலும், ரூத்ராஜ் கெய்க்வாட் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய உத்தப்பா 19 ஓட்டங்களிலும், மொயின் அலி 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார். கேப்டன் தோனியும் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அம்பதி ராயுடு மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 136 ஓட்டங்கள் எடுத்தது.
அதனைத்தொடர்ந்து, களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர்.
பிரித்வி ஷா 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷிகர் தவான் நிதானமாக ஆடினார். பிரித்வி ஷாவைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐய்யர் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ரிஷப் பன்ட் 15 ஓட்டங்களும், ரிபல் பட்டேல் 18 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ஷிகர் தவன் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்ரதல் தாகுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர், ஷிம்ரோன் ஹெட்மெய் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் டெல்லி அணி 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்தது.
அதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழத்தி புள்ளிப்பட்டியலில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது.