பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு: தற்போதைய நிலவரம் என்ன?
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரையிலும் 22 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரபல மலை வாசஸ்தலமான முர்ரியில் கடந்த திங்கள்கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் பனிப்பொழிவில் சிக்கி சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 10 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் அடங்குவர்.
முர்ரிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காரில் நீண்டநேரம் அமர்ந்திருந்ததாலும், ஜன்னல்கள் மூடப்பட்டு, ஹீட்டர் ஆன்செய்யப்பட்டதாலும் வாகனத்திற்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, பல சுற்றுலா பயணிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முர்ரியின் உள்ளூர் நிர்வாகத்தை சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் சிக்கிய பயணிகள் மற்றும் மயக்கமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இதனையடுத்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக முர்ரியை பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது.
மேலும் மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.