துருக்கி, சிரியாவில் தோண்ட தோண்ட சடலங்கள்! 7700ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தின் கோர தாண்டவத்தினால் பலி எண்ணிக்கை 7,700ஐ தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயரும் பலி எண்ணிக்கை
துருக்கி, சிரியா நாடுகள் பயங்கர பூகம்பத்தினால் பேரழிவை சந்தித்துள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் நிலைகுலைந்தன.
முதற்கட்டமாக இடிபாடுகளுக்குள் சிக்கி 2300 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 6,000-த்தை தாண்டியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
@Burak Kara/Getty Images
இந்த நிலையில் தற்போது இருநாடுகளிலும் பலி எண்ணிக்கை 7,726 ஆக உயர்ந்துள்ளதாக செய்தி ஊடகமான சிஎன்என் தெரிவித்துள்ளது. மேலும் 42,259 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சர்
பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ சுமார் 7,500 துருக்கிய வீரர்கள் பணியாற்றி வருவதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலூசி அகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், '75 ராணுவ விமானங்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக 1,500 வீரர்கள் மீட்புக்குழுவில் இணைவார்கள். மேற்கில் இருந்து 9 கமாண்டோ பட்டாலியன்களும், சைப்ரஸில் இருந்து 4 கமாண்டோ பட்டாலியன்களும் பிராந்தியத்திற்கு வரும்' என கூறியுள்ளார்.
@Reuters