சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு; 9 பொலீசாருக்கும் மரண தண்டனை
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கபட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாத்தன்குளத்தில் கொரோனோ காலத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரையும் கடையை அடைப்பது தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் கடுமையாக தாக்கினர்.

தந்தை மற்றும் மகன் இருவரையும் ஒருவர் முன் மற்றொருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் உலுக்கிய நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.
6 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில், சிபிஐ 2000க்கும் அதிகமான பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதனையடுத்து, மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
9 பேருக்குமான தண்டனை விபரத்தை மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
9 பேருக்கும் மரண தண்டனை
வழக்கு குறித்து பேசிய நீதிபதி முத்துக்குமரன், "காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர்.இருவரும் நிராயுதபானியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது.

குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும் குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும்.
பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது. சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல் பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர்.
காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.
முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபாரதத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |