ஹைதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,207-ஆக உயர்வு
ஹைதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,207-ஆக உயர்ந்துள்ளது.
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த கடந்த 14-ஆம் திகதி காலை, 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால், மக்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஹைதியில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,207-ஆக அதிகரித்துள்ளது என ஹைதி அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 344 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நிலநடுக்கத்தில் 53,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நிலநடுக்கத்தால் 12,268 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.