படிக்க மறுக்கப்பட்ட வாய்ப்பு - ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்ட மாணவர்
படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், மாணவர் ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார்.
ஐஐடி இணையதளத்தை ஹேக் செய்த மாணவர்
கான்பூர் ஐஐடி, இளநிலை சைபர் செக்யூரிட்டி’ என்ற பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோடிங் மற்றும் சைபர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட மாணவர் ஒருவர், இந்த படிப்பில் சேர விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தி, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி சேர்க்கை செயல்முறையை நிறைவு செய்துள்ளார்.
ஆனால், அவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதால், அந்தத் திட்டத்திற்கான தேர்வுச் செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ள ஹேக்கத்தானில் அவரால் பங்கேற்க இயலவில்லை.
தனக்கு சைபர் பாதுகாப்பில் உள்ள திறமையை காட்ட முயற்சித்த அவர், கான்பூர் ஐஐடி மற்றும் சென்னை ஐஐடியின் இணையதளத்தை முடக்கி, "எனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கும் நோக்கம் இல்லை. எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே" என்ற செய்தியை பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டறிந்த ஐஐடி குழுவினர், உடனடியாகச் செயல்பட்டு இணையதளத்தை மீட்டனர்.
இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ஐஐடி கான்பூர் இயக்குநர் மனிந்திர அகர்வால், "அந்த மாணவருக்கு சைபர் பாதுகாப்பில் போதுமான முன் அனுபவம் இல்லாததால் அவர் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இந்தக் கல்வி அமர்வுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை ஏற்கனவே முடிவடைந்துவிட்டது, எனவே இப்போது சேர்க்கை சாத்தியமில்லை.
இருப்பினும், அந்த மாணவரை அழைத்து, முறையான சோதனை மூலம் அவரது தொழில்நுட்பத் திறன்களை மதிப்பீடு செய்வோம். அவர் தனது திறமையை நிரூபித்தால், அடுத்த மாணவர் சேர்க்கைச் சுற்றில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இணையதளத்தை ஹேக் செய்வது சட்டவிரோதம் என்றாலும், மாணவரின் திறமை மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |