இஸ்ரேலிய மக்களால் ஆயுதங்களுடன் முற்றுகையிடப்பட்ட அமெரிக்க அரசியல்வாதி
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைக்குச் சென்றிருந்தபோது, ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியக் குடியேறிகள் தன்னை முற்றுகையிட்டதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா புகார் தெரிவித்துள்ளார்.
M4 துப்பாக்கிகள்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் பாலஸ்தீனர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களை நேரில் காணும் அனுபவமாக இதனை அவர் விவரித்துள்ளார்.

பாலஸ்தீன கிராமம் ஒன்றில் இருந்து பேசிய ரோ கன்னா, இஸ்ரேலியக் குடியேறிகளால் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் மேற்குக் கரையின் தென்பகுதிக்கு அவரது தூதுக்குழுவினர் சென்றிருந்தபோது, அவர் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனையுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினருமான ரோ கன்னா தெரிவிக்கையில், மேற்குக் கரையில் வலுக்கட்டாயமாகக் குடியேறியுள்ள இஸ்ரேலியர்கள் வசம் அமெரிக்கத் தயாரிப்பான M4 துப்பாக்கிகள் இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலியக் குடியேறிகளால் சேதப்படுத்தப்பட்ட ஒரு கிராமத்தில் தாங்கள் சென்றிருந்ததாகவும், அங்குள்ள பாடசாலையை அவர்கள் சேதப்படுத்தியுள்ளதையும் கிராமத்தை நாசப்படுத்தியுள்ளதையும் பார்வையிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இஸ்ரேல் இராணுவம், அந்தக் குடியேறிகள் பக்கம் நின்றதாகவும் அமெரிக்கர்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி ரோ கன்னா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், துப்பாக்கிகளை ஏந்தியிருந்த 21 மற்றும் 22 வயதுடைய அந்த குடியேறிகளின் கண்களில் நான் ஆணவத்தைக் கண்டேன்; எங்களைத் தடுத்து நிறுத்தியதை எண்ணி அவர்கள் ஏளனமானச் சிரித்துக்கொண்டிருந்தனர்.
எனது வரிப்பணத்தால் நிதியுதவி பெறும் அந்த இளம் இஸ்ரேல் இராணுவத்தினரிடமும் அதே ஆணவம் தெரிந்தது. அமெரிக்கர்களைத் தடுத்து நிறுத்துகிறோம் என்றோ,
அந்தப் பேருந்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார் என்றோ அவர்கள் எந்த மரியாதையையும் காட்டவில்லை; அங்கு அமெரிக்கர்கள் இருப்பதையும், இது குறித்து அமெரிக்கத் தூதரகம் கவலை கொண்டுள்ளது என்பதையும் எங்கள் மொழிபெயர்ப்பாளர் அவர்களிடம் கூறியபோது அவர்கள் சிரித்தார்கள் என்றார்.
சட்டவிரோதமானவை
அந்தச் சம்பவம் அதிகாரத்தின் ஆணவத்தை, அதாவது எவ்விதப் பொறுப்புக்கூறலும் இல்லாத, முழுமையான தண்டனையிலிருந்து விலக்கு பெற்ற அதிகாரத்தின் ஆணவத்தை வெளிப்படுத்தியது; மேலும் இது ஒடுக்குமுறையின் நச்சுத்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது என்றும் கன்னா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்கத் தூதரகம் மற்றும் இஸ்ரேலியக் காவல்துறையைத் தொடர்புகொண்ட பிறகு, தானும் தனது குழுவினரும் இறுதியில் பயணத்தைத் தொடர முடிந்தது என்று கன்னா கூறியுள்ளார்.

கிழக்கு ஜெருசலேம் உட்பட, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதி முழுவதும் உள்ள குடியேற்றங்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் வசிக்கின்றனர்.
மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை சட்டவிரோதமானவை எனக் கருதுகிறது; அப்பகுதியில் குடியேறியவர்கள் மேற்கொள்ளும் வன்முறை மற்றும் பிற நடவடிக்கைகள் காரணமாக இஸ்ரேல் தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
1967-இல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து, அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அப்பகுதி ஒரு தன்னிறைவான பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதைத் தடுத்து வந்துள்ளன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய, உயிரிழப்புகளை ஏற்படுத்திய அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிறகு அந்தத் கட்டுப்பாடுகள் கணிசமாகத் தீவிரமடைந்தன. மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலில் சுமார் 300,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |