என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி... டோனி பேசியுள்ள வார்த்தைகள்... நெகிழ்ந்து போயுள்ள ரசிகர்கள்
ஐபிஎல்லில் எனக்கான கடைசி போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டி அமைய வாய்ப்பு உள்ளது என டோனி கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து எப்போது அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி இருந்து வருகிறது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றினால் நிச்சயம் டோனி ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டது.
ஆனால் டோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது அவரது வாயாலேயே தற்போது உறுதியாகியுள்ளது. டோனி இது குறித்து பேசுகையில், நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சொல்ல சுதந்திர தினத்தை விட வேறு சிறந்த நாள் இல்லை என்பதனாலேயே நான் அதனை செய்தேன். அதனால் தான் பேர்வெல் மேட்ச்சில் விளையாடவில்லை.
மேலும் எனக்கான கடைசி போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டி என்னுடைய ஃபேர்வெல் போட்டியாக அமைய வாய்ப்பு உள்ளது.
அதை விட சிறப்பான தருணம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? என்னுடைய கடைசி போட்டி சேப்பாக்கத்தில் தான் என பதிலளித்துள்ளார்.
அவரின் இந்த வார்த்தைகள் தற்போது டோனி ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.