தோனி பேட்டிங் திறமையை இழந்து விட்டார்! CSK அணியில் இருந்து அவர் ஒதுங்கி விடலாம்... ஒளிவு மறைவின்றி பேசிய பிரபல வீரர்
இந்த ஐ.பி.எல். போட்டியோடு தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று கருதுவதாக அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட்ஹாக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் தோனி. 40 வயதான தோனி ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 3 முறை (2010, 2011, 2018) ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
கடந்த முறை பிளேஆப் சுற்றுக்கு நுழையாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐ.பி.எல். போட்டியில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குள் கிட்டத்தட்ட நுழைந்து விட்டது.
இந்தநிலையில் இந்த ஐ.பி.எல். போட்டியோடு தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட்ஹாக் தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், சி.எஸ்.கே. கேப்டன் தோனிக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல். சீசன்தான் கேப்டனாகவும், வீரராகவும் கடைசி சீசனாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
தோனி தனது பேட்டிங் திறனை இழந்து விட்டார். இந்த காரணத்தினால் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அவர் ஒதுங்கி விடலாம். வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்த விதம் அவரது பேட்டிங் திறனை இழந்து விட்டதாகவே கருதுகிறேன்.
40 வயதான தோனிக்கு தளர்வு வந்து விட்டது. எனவே இந்த ஆண்டு சீசன் முடிந்த பிறகு தோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்கலாம். 2022-ம் ஆண்டு சீசனுக்கு மெகா ஏலம் நடக்க உள்ளது.
இதில் தோனி இல்லாவிட்டால் சி.எஸ்.கே. அணிக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும். அதன்பின் தோனியை வேறு பணிகளில் சி.எஸ்.கே. அணி பயன்படுத்தும்.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது வரவேற்கதக்கது என கூறியுள்ளார்.