தன் நாட்டு மக்களை சோம்பேறிகள் என்று கூறினாரா ஜேர்மன் சேன்ஸலர்?
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், ஜேர்மன் மக்களை சோம்பேறிகள் என்று அழைக்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.
ஜேர்மன் மக்களை சோம்பேறிகள் என கூறினாரா ஜேர்மன் சேன்ஸலர்
தான் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, ஜேர்மனியின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவும், தீவிர வலதுசாரிக்கட்சியான AfD கட்சியின் எழுச்சியைத் தடுபதற்காகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையிலும், மக்கள் மனதில் இடம்பிடிக்க மெர்ஸ் தவறியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் Deutschland TREND என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், வாக்காளர்களில் 16 சதவிகிதம் பேர் மட்டுமே மெர்ஸ் ஆட்சி குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர். இதுவரை ஆண்ட சேன்ஸலர்களிலேயே இவ்வளவு குறைந்த ஆதரவைப் பெற்றுள்ளவர் மெர்ஸ்தான்.
இந்நிலையில், நாம் அரசை வழிநடத்த முயற்சிக்கும் பாதை சரியானது என்பதை, நாட்டு மக்களை போதுமான அளவு நம்பவைப்பதில் நான் ஏன் தோல்வியடைகிறேன் என்ற கேள்வி என்னை மேலும் மேலும் கவலைக்குள்ளாக்கி வருகிறது என்று கூறியுள்ளார் மெர்ஸ்.
இந்தச் செய்தி நன்கு புரிந்துகொள்ளப்படும் வகையில், எனது தகவல் தொடர்பை நான் மேம்படுத்த வேண்டும் என்பதை அறிவேன் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.
விடயம் என்னவென்றால், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்வது அல்லது மிக நீண்ட மருத்துவ விடுப்பு எடுப்பது போன்ற பழக்கங்கள் நாட்டின் போட்டித்திறனைப் பாதிக்கின்றன என்று சமீபத்தில் மெர்ஸ் கூறியிருந்தார்.
அந்த விடயம் ஜேர்மன் மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், ’என் கட்சியில் உள்ள யாரும், நான் உட்பட, ஜேர்மனியில் வாழும் மக்கள் சோம்பேறிகள் என்று ஒருபோதும் சொன்னதில்லை, இல்லவே இல்லை’ என்று கூறியுள்ளார் மெர்ஸ்.
ஜேர்மனியை விட சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில் ஆண்டுக்கு 200 மணிநேர வேலை அதிகம் என்பதையும், அதனால் சுவிட்சர்லாந்து நம்மை விட வெளிப்படையாகவே சிறந்த நிலையில் உள்ளது என்பதையும்தான் தான் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |