ஆப்பிள் என கருதி சாப்பிட்ட பழம்: பிஞ்சு சகோதரர்களை காவு வாங்கிய மரம்
கொலம்பியா நாட்டில் இளம் சகோதரர்கள் இருவர் தங்கள் பாட்டியின் வீட்டு தோட்டத்தில் இருந்து சாப்பிட்ட பழத்தால் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்திலேயே கடந்த ஞாயிறன்று தொடர்புடைய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
5 வயதான ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி 3 வயதான அமிரா சாயா ஆகியோர் ஆப்பிள் சாப்பிடுவதாக கருதி குறித்த பழங்களை சாப்பிட்டுள்ளனர்.
ஆனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சிறார்கள் இருவரும் வாந்தி எடுக்கவும், வலிப்பு நோயால் அவதிப்படவும் தொடங்கினர். சிறார்கள் இருவரும் சாப்பிட்ட பழமானது உள்ளூரில் bola de toro என அறியப்படுகிறது.
விஷத்தன்மை கொண்ட இந்த மரமானது 10 அடி உயரம் வரையில் வளரும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, சிறார்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்த இருவரும், இறுதியில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுவன் மொத்தம் 6 பழங்களும் சிறுமி 4 பழங்களையும் தின்றுள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் வெனிசுலாவைச் சேர்ந்த குடும்பம் என்பதால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற முடியாமல் போனது எனவும், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாமதமானதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறுமியின் நிலை ஒரு கட்டத்தில் கவலைக்கிடமாக மாறவே, அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இறுதியில் சிறுமி, அங்கேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோர் கொலம்பியாவின் ஓம்புட்ஸ்மேன் அலுவலகத்தில் உதவி பெற முடிவு செய்தனர். இதனால் உயர் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும் என நம்பியுள்ளனர்.
ஓம்புட்ஸ்மேன் அலுவலகம் உடனடியாக அனுமதி அளிக்க, அவர்கள் Cucuta நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சிறுவன் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.
விஷத்தன்மை கொண்ட பழம் சாப்பிட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள சிறுவர்களின் பெற்றோர் வெனிசுலாவில் இருந்து கொலம்பியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். சிறுவர்களின் பாட்டியின் குடியிருப்பிலேயே இந்த குடும்பமும் வசித்து வந்துள்ளது.
சிறுவர்கள் இருவரும் ஆப்பிள் பழம் என கருதியே, குறித்த விஷத்தன்மை கொண்ட பழத்தை சாப்பிட்டுள்ளனர் என அண்டை வீட்டார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வீட்டு தோட்டத்தில் குறித்த மரம் வளர்ப்பவர்கள் உடனையே அதை வெட்டி வீச வேண்டும் என நகர நிர்வாகமும் பொலிஸ் தரப்பும் உத்தரவு பிறப்பித்துள்ளது.