பெற்றோரின் விருப்பத்திற்கு மறுப்பு: இத்தாலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்
இத்தாலியில் பெற்றோரின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்த 18 வயதான பாகிஸ்தானிய இளம் பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Novellara பகுதியில் வசித்து வந்த 18 வயதேயான Saman Abbas கடந்த ஏப்ரல் 30ம் திகதியில் இருந்தே மாயமாகியுள்ளார். ஆனால், அவர் மாயமாகியிருக்க வாய்ப்பில்லை எனவும், பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே இத்தாலிய பொலிசார் நம்புகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள உறவினரை திருமணம் செய்துகொள்ள Saman Abbas மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றனர் பொலிசார்.
Saman Abbas தொடர்பிலான இச்சம்பவம் இத்தாலியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Saman Abbas-ன் பெற்றோர்களான Shabbar Abbas மற்றும் Nazia Shaheen ஆகிய இருவரும் உறவினரான 33 வயது Danish Hasnain என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம் எனவும்,
அவர் திட்டமிட்டு கொலையை செய்திருக்கலாம் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும், Saman Abbas-ன் 16 வயது சகோதரர் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தற்போது அந்த சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மே 1ம் திகதி இரவு பெற்றோருடன் நடக்க சென்ற Saman Abbas அதன் பிறகு குடியிருப்புக்கு திரும்பவில்லை எனவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, சம்பவம் நடந்த சில நாட்களில் Shabbar Abbas மற்றும் Nazia Shaheen பாகிஸ்தானுக்கு தப்பிவிட, Danish Hasnain தலைமறைவாகியுள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுத்து வந்த அதிகாரிகள் இன்னொரு உறவினரை பிரான்சில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதனிடையே, தமது மகளை கொல்லும் கொடூர எண்ணம் தமக்கு இல்லை எனவும், அவர் பெல்ஜியத்தில் தற்போது தங்கியுள்ளார் எனவும், ஜூன் 10ம் திகதி தாம் இத்தாலிக்கு திரும்பி வந்த பின்னர் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் என Shabbar Abbas உருக்கமாக தெரிவித்துள்ளார்.