UAEயில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மூடப்படுகிறதா? வலுக்கும் கோரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மூட கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்க ராணுவ தளங்கள்
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான மோதலில், இஸ்ரேல் மட்டுமல்லாது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
ராணுவ தளங்கள் மட்டுமல்லாது, நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியது.

தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், போர் நிறுத்த கோரிக்கைகளில் ஒன்றாக பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை அகற்ற வேண்டும் என ஈரான் கூறியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் ராணுவ தளங்களை நாட்டில் இருந்து அகற்றுவது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் விவாதம் எழுந்துள்ளது.
அமெரிக்க ராணுவ தளம் மூடப்படுகிறதா?
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் விமர்சகர் மற்றும் பட்டத்து இளவரசரின் முன்னாள் ஆலோசகருமான அப்துல்காலிக் அப்துல்லா, ஐக்கிய அரபு அமீரகத்தில் அமெரிக்கத் தளங்களை மூடுவது பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஈரானிய ஆக்கிரமிப்பின் போது, தன்னைத் திறம்படப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் தனக்கு உண்டு என்பதை ஐக்கிய அரபு அமீரகம் நிரூபித்துள்ளதால், அதற்கு இனி தன்னைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்கா தேவையில்லை.
هذا ما قلته لرويترز اليوم: لم تعد الامارات بحاجة لأمريكا كي تدافع عنها فقد اكدت خلال العدوان الإيراني انها قادرة الدفاع عن نفسها بجدارة، ما تحتاجه الإمارات هو اقتناء افضل وأحدث ما لدى امريكا من اسلحة فقط لذلك حان وقت التفكير في اغلاق القواعد الأمريكية فهي عبء وليس رصيد استراتيجي
— Abdulkhaleq Abdulla (@Abdulkhaleq_UAE) April 19, 2026
அமெரிக்காவிடம் உள்ள மிகச் சிறந்த மற்றும் நவீன ஆயுதங்களை மட்டும் பெற்றுக்கொள்வதுதான் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தேவை. எனவே, அமெரிக்கத் தளங்களை மூடுவது பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது, ஏனெனில் அவை ஒரு சுமையே தவிர, ஒரு மூலோபாய சொத்து அல்ல" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஓமன் வெளியுறவு அமைச்சர் சையத் பத்ர் அல்புசைதி, "அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்த வளைகுடா நாடுகள், தற்போது அந்த ஒத்துழைப்பைத் தங்களின் தற்போதைய பாதுகாப்பிற்கும், எதிர்காலச் செழிப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு கடுமையான பலவீனமாகக் கருதுகின்றன" என தெரிவித்திருந்தார்.

மேலும், ஈரான் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
துபாயில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் ஹோட்டல் போன்ற பொதுமக்களின் கட்டிடங்களையும், ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் ஃபுஜைரா எண்ணெய் ஏற்றுமதி முனையம் போன்ற எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சேதப்படுத்தியது.

மேலும், அமேசானின் இரண்டு தரவு மையங்கள் மீதும் சிதறல்கள் தாக்கியுள்ளன. இது அப்பகுதி முழுவதும் வங்கி தொடர்பான கிளவுட் சேவைகளையும் கணினி வசதிகளையும் சீர்குலைத்தன.
ஐக்கிய அரபு அமீரகத்தில், 2 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 224 பேர் காயமடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |