மருத்துவமனை மீது அதிருப்தி.. துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட முதியவர்
அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், பஃபலோ நகரில் உள்ள அல்லினா என்ற மருத்துவமனையிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
மருத்துவமனைக்கு வந்திருந்த முதியவர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பதற்றத்தில் சிதறி வெளியே ஓடினர்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார் உடனடியாக அங்கு வந்து மருத்துவமனையை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்தியவர் 67 வயதான கிரிகோரி பால் அல்ரிச் என்பது தெரியவந்தது. மருத்துவமனை அளித்த சிகிச்சை அவருக்கு திருப்தி அளிக்காததால் இப்படி நடந்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை தலைவர் பாட் பட்கே கூறுகையில், மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கான சரியான நோக்கம் தெரியவிலை.
ஆனால், தாக்குதல் நடத்திய நபர், இப்பகுதியில் உள்ள பல மருத்துவமனைகளில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியில்லை என பிரச்சனை செய்துள்ளார்.
இது பல ஆண்டுகளாக நடந்துள்ளது. எனவே, நிச்சயமாக அவர் சுகாதாரப் பாதுகாப்பில் அதிருப்தி அடைந்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இது உள்நாட்டு பயங்கரவாதம் போன்று தோன்றவில்லை என்றார்.
இதனிடையே, குறித்த மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஜன்னல் கதவுகள் உடைந்த சத்தம் கேட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அங்கு பொலிசாரும் அதிகாரிகளும் சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் தங்கியிருந்த ஹொட்டலிலும் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.