தவறான சிகிச்சையால் ஆஸ்திரியாவில் நடந்த சம்பவம்! வெளியான அதிர்ச்சி தகவல்
ஆஸ்திரியாவில் மருத்துவர் ஒருவர் செய்த தவறான சிகிச்சைக்கு நீதிமன்றம் அவருக்கு சுமார் 2,700 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
ஆஸ்திரியாவில் 83 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சில நாட்களாகவே இடது காலில் தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் ஆஸ்திரியாவில் உள்ள Freistadt கிளினிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் ஒருவர் இடது காலை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவ நிபுணர் நோயாளியின் இடது காலுக்கு பதிலாக வலது காலை அகற்றியுள்ளார்.
இந்த விடயம் கால் அகற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவர் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மருத்துவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு அபராதமாக 2,700 யூரோக்கள் செலுத்த சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த நோயாளிக்கு நியாயம் கிடைக்கும் முன்பே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரின் குடும்பத்திற்கும் 5,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவும் மருத்துவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.