ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி தொடர்பில் மீண்டும் அதிர்ச்சி தகவல்: மருத்துவர் மாயம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளித்த சைபீரிய மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர் மாயாமாகியுள்ளார்.
கடந்த ஆண்டு அலெக்ஸி நவல்னிக்கு மர்ம நபர்களால் விஷமளிக்கப்பட்ட நிலையில், இந்த மருத்துவரே உடனடியாக சிகிச்சை அளிக்க முன்வந்தார்.
மாயமான மருத்துவர் அலெக்ஸாண்டர் முரகோவ்ஸ்கி ஓம்ஸ்க் பிராந்தியத்தின் தற்போதைய சுகாதார அமைச்சராக உள்ளார். சனிக்கிழமை வேட்டையாட சென்ற மருத்துவர் முரகோவ்ஸ்கி அதன்பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் ஓம்ஸ்க் உள்விவகாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், மருத்துவர் முரகோவ்ஸ்கி பெயர் குறிப்பிடாமல், வேட்டைக்கு சென்ற ஒருவர் மாயமாகியுள்ளார், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
நவல்னி விவகாரத்தில் புடின் அரசுக்கு ஆதரவாக மருத்துவர் முரகோவ்ஸ்கி செயல்பட்டதாகவும், மேல்சிகிச்சைக்காக நவல்னியை ஜேர்மனிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை மருத்துவர் முரகோவ்ஸ்கி தாமதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம், அதுவரை மருத்துவமனை ஒன்றின் தலைமை மருத்துவராக செயல்பட்டு வந்த முரகோவ்ஸ்கி, சைபீரிய பிராந்திய பகுதியின் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.