பிணைத்தொகை வாங்கிவிட்டு... ஆப்கானிஸ்தான் மருத்துவர் படுகொலை: கதறும் குடும்பம்
ஆப்கானிஸ்தானில் பிரபல மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் மொஹமத் நாதர் அலெமி என்ற மருத்துவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு மசார்-இ-ஷரீப் நகரில் கடத்தப்பட்டார்.
அவரை கடத்தியவர்கள் அவரை விடுவிக்க பிணைத்தொகையை கோரினர் என்று அவரது மகன் ரோஹீன் அலெமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்பம், பல கட்ட பேரத்திற்கு பிறகு 350,000 டொலர் தொகையை அந்த கடத்தல் கும்பலுக்கு அளித்துள்ளது.
ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட அந்த கும்பல், மருத்துவர் அலெமியை கொன்று, உடலை தெருவில் வீசிவிட்டு தப்பியதாக தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த கும்பல், சடலத்தை வீசிய இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளது.
தாலிபான்கள் ஆட்சிக்கு வரும் முன்னர், இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் பலமடங்கு அதிகரித்து வந்துள்ளது. தற்போது தாலிபான்கள் ஆட்சியிலும் அதே நிலை நீடிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதன் எண்ணிக்கை தற்போது குறைந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மருத்துவர் அலெமி உட்பட மூன்று கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் 8 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தாலிபான்களின் உள்விவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதில் இருவர் மருத்துவர் அலெமியை கடத்தி கொலை செய்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.