மூளையில் இரத்தக்கட்டிகளை உருவாக்குகிறதா ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி?: ஜேர்மனி எடுத்துள்ள முடிவு
ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மூளையில் இரத்தக்கட்டிகள் ஏற்படுவதில் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மனி அந்த தடுப்பூசியை தடை செய்துள்ளது.
ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூளையில் இரத்தக்கட்டிகள் உருவாகுவதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆகவே, அது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள்ள ஜேர்மன் சுகாதார அமைச்சகம், Paul Ehrlich நிறுவனத்தின் பரிந்துரையின்பேரில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதுவரை ஏழு பேருக்கு மூளையில் இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது என்று கூறிய ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, 1.6 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் ஏழு பேருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது குறைந்த அளவிலான அபாயம்தான் என்றாலும், அது தடுப்பூசியுடன் தொடர்புடையது என்பதால் அது சராசரிக்கும் மேலான பிரச்சினைதான் என்றார்.
இது அறிவியல் பூர்வமான முடிவு, அரசியல் பூர்வமான முடிவு அல்ல என்று கூறியுள்ள Jens Spahn, நாங்கள் Paul Ehrlich நிறுவனத்தின் பரிந்துரையின்பேரில்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.
ஏற்கனவே, அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு தடை விதித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.