இந்திய அணிக்கு முழு நேர பயிற்சியாளராக மாறுவீர்களா? டிராவிட் அளித்த தெளிவான பதில்
இந்திய அணியின் முழு நேர பயிற்சியாளர் ஆக விருப்பம் உள்ளதா என்ற கேள்விக்கு டிராவிட் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்வுள்ளதால், இலங்கை அணிக்கெதிரான தொடரில், இந்தியாவின் இளம் படையை டிராவிட் வழி நடத்தினார்.
ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை இந்திய அணி இழந்தது,
இந்நிலையில், வரும் டி20 உலகக்கோப்பை தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால், அடுத்து டிராவிட் தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து டிராவிட்டிடம் கேட்ட போது, நான் பயிற்சியாளராக மிகவும் மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருகிறேன். இருப்பினும் நான் அடுத்து நடக்கப்போவதை நினைத்து யோசிப்பது இல்லை.
தற்போதைக்கு நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இலங்கை தொடரில் நான் இந்திய அணிக்கு பயிற்சி அளித்த அனுபவம் மகிழ்ச்சியான ஒன்று.
இளம் வீரர்களுடன் அணியின் பயிற்சியாளராக செயல்படுவது சிறப்பான ஒன்று. இந்த தொடரில் நான் பயிற்சியாளராக செயல்பட்டாலும் முழுநேர பயிற்சியாளராக செயல்படும் போது ஏகப்பட்ட சவால்கள் இருக்கும். அதனால் நான் முழுநேர பயிற்சியாளராக செயல்படுவேனா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.