கால்பந்து வலையை காரில் கட்டிக் கொண்டு சுற்றிய நபர்: பிரித்தானிய பொலிஸார் நடவடிக்கை
பிரித்தானியாவில் காரின் மீது கால்பந்து வலையை வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் சாரதி ஒருவர் வாகனம் ஓட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய சாலையில் பரபரப்பு
பிரித்தானியாவின் ஹார்ட்ஃபோர்ட்ஷையர்(Hertfordshire) பகுதியில் நபர் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் கால்பந்து இலக்கு வலையை தனது காரின் மேல் கட்டிக் கொண்டு சுற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்ட்ஃபோர்ட்ஷையர் காவல்துறை இது குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோவில், கால்பந்து வலையை மேல் கட்டிக் கொண்ட கார் ஒன்று Borehamwood பகுதியிலிருந்து வெளியேறுவதை பார்க்க முடிகிறது.

உடனே காவல்துறையினர் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அந்த கால்பந்து உலோக கட்டமைப்பானது காரோடு சரியாக கட்டப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே விபத்து தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கார் ஓட்டுநருக்கு அபராதம்
பிரித்தானியாவில், இவ்வாறு காரின் மேல் சுமையை சரியாக கட்டாமல் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் செல்வது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும்.
இத்தகைய செயல்கள் மற்ற கார் ஓட்டுநர்களின் உயிர்களை அச்சுறுத்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது என காவல்துறை எச்சரித்துள்ளது.

சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநருக்கு ஓட்டுநர் உரிமத்தில் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 120 பவுண்ட்(அதாவது 13,000 ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |