அது இஸ்ரேல் ட்ரோன்கள் அல்ல... வெறும் பொம்மை: ஈரான் வெளிவிவகார அமைச்சர் கிண்டல்
ஈரான் பகுதியை தாக்கியதாக கூறப்படும் ட்ரோன்கள் வெறும் பொம்மைகள் என கிண்டலடித்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
பொம்மை விளையாட்டு
ஈரானின் Isfahan பகுதியில் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Hossein Amirabdollahian தெரிவிக்கையில், உண்மையில் அது பொம்மைகளால் நடத்தப்பட்ட விளையாட்டு என்றார்.
மேலும், ஈரானின் அரசாங்கம் தெரிவிக்கையில், அது ஈரானுக்குள் ஊடுருவியவர்கள் நடத்திய தாக்குதலாக இருக்கவே வாய்ப்பு என்றும், இஸ்ரேல் தரப்பு முன்னெடுத்திருப்பதாக கூறப்படுவதில் ஆதாரமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த ட்ரோன்கள் ஈரானில் இருந்தே இயக்கப்பட்டுள்ளதாகவும், சில நூறு மீற்றர்கள் பறந்த நிலையில், அழிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் Hossein Amirabdollahian தெரிவித்துள்ளார்.
எங்கள் பிள்ளைகள் விளையாடும் பொம்மைகள் போன்று உள்ளது என்றும், உன்மையில் அவை ட்ரோன்கள் என்று நம்ப முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஈரான் இந்த விடயத்தை விரிவாக விசாரித்து வருகிறது, ஆனால் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் துல்லியமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்கிரமாக இருக்கும்
மேலும், பதிலடி தருவதாக குறிப்பிட்டு ஈரானின் நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் செயல்பட்டால், ஈரானின் அடுத்த பதில் துல்லியமாகவும் உடனடியாகவும் உக்கிரமாகவும் இருக்கும் என்று அமைச்சர் Hossein Amirabdollahian எச்சரித்துள்ளார்,
ஆனால் இஸ்ரேல் தரப்பில் இந்த விவகாரத்தை கைவிடுவதாக இருந்தால், எங்கள் பக்கத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் மேலும் இருக்காது என்றார். இதனிடையே, ஈரான் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு தங்களுக்கு தொடர்பில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே ஈரான் மீதான இஸ்ரேலின் பதில் தாக்குதலில் தங்களுக்கு உடன்பாடில்லை என்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈரான் மீதான அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இருந்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் ஆதரவில்லாத நிலையில் ஈரான் மீதான நேரடி மோதலை தவிர்த்து, சைபர் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபடலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |