இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
இம்மாதம், அதாவது, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள், தங்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
பிரித்தானிய குடியுரிமையும் மற்றொரு நாட்டின் குடியுரிமையும் என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

விடயம் என்னெவென்றால், பிரித்தானியர்கள் பல நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். உதாரணமாக, ஸ்பெயின் நாட்டில் வாழும் பிரித்தானியர்கள், தங்கள் பிரித்தானியக் குடியுரிமையைத் துறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஸ்பெயின் குடியுரிமை கிடைக்கும்.
அதுபோல, ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இதுவரை எந்த பிரச்சினையுமின்றி பல நாடுகளுக்கு பயணித்து, பிரித்தானியாவுக்கு திரும்பி வந்தார்கள்.
அப்படி பிரித்தானிய மற்றும் இத்தாலி நாட்டு இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர், தற்போது பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பிப்ரவரி 25ஆம் திகதிக்குப் பிறகுதான் பிரித்தானியாவுக்குத் திரும்புவார்.
ஆக, அவர் பிரித்தானியாவுக்குத் திரும்பும்போது, அவரிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லாததால் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் இந்த திடீர் முடிவால், வெளிநாடுகளில் வாழும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஏராளம் பிரித்தானியர்கள் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.
அப்படி சிக்கலை சந்திக்க உள்ளவர்கள், 589 பவுண்டுகள் கொடுத்து, ’certificate of entitlement’ என்னும் சான்றிதழை வாங்கவேண்டும் என்கிறது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.
பிரித்தானியா மற்றும் மற்றொரு நாட்டின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், அவர்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லையென்றால், இந்த certificate of entitlement என்னும் சான்றிதழை வாங்கி, அதை தங்களிடம் இருக்கும் பாஸ்போர்ட்டில் இணைத்துக்கொள்ளவேண்டும்.

அப்படி அந்த certificate of entitlementம், பிரித்தானிய பாஸ்போர்ட்டும் இல்லாத இரட்டைக் குடியுரிமை கொண்டர்கள் பிரித்தானியாவுக்கு வரும் படகு, விமானம் அல்லது ரயில் எதிலுமே ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த திடீர் விதி, வெளிநாடுகளில் வாழும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஏராளம் பிரித்தானியர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.
பிரித்தானியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கிறது. அப்படி இருந்தும், பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லாவிட்டால் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்பது வேடிக்கையாக உள்ளது என்கிறார்கள் சிலர்.
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தப்போகிறோம் என துவங்கி, புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்னும் பெயரில் புதிய விதிகளை அறிமுகம் செய்துவந்த பிரித்தானியா, தற்போது பிரித்தானிய குடியுரிமை கொண்டவர்களுக்கே இப்படி கட்டுப்பாடுகள் விதிப்பதைப் பார்த்தால், பிரித்தானியா எதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |