இந்தியா, இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு - துபாய்
இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கான விமான போக்குவரத்துக்கான தடையானது தற்காலிகமாக அடுத்த மாதம் 7-ஆம் திகதி வரை தொடரும் என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்ட 2-வது கொரோனா தொற்று அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் திகதி முதல் விமான சேவையானது தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தடையானது நேற்று வரை (ஜூலை 28) நீட்டிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கோல்டன் விசா, முதலீட்டு விசா, பங்குதாரர் விசா மற்றும் மருத்துவ பணியாளர்கள், எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்பவர்கள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் ஜெட் விமானங்களில் வருவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பலர் அமீரகம் வருவதற்கு அர்மீனியா, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பிறகு அமீரகத்துக்குள் வருகின்றனர்.
இருந்தாலும் பலர் ஆண்டு விடுமுறை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சென்று மீண்டும் அமீரகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது எமிரேட்ஸ் விமான நிறுவனம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ஆம் திகதி வரை இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கான விமான போக்குவரத்துக்கான தடையானது தற்காலிகமாக தொடரும் என புதன்கிழமை மாலை (ஜூலை 28) தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆகஸ்டு 7-ஆம் திகதி வரை துபாய் நகருக்கு விமானங்கள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.