வீட்டுச் சிறையில் தவிப்பதாக கூறப்பட்ட துபாய் இளவரசியின் புதிய புகைப்படம் வெளியானது
துபாய் மாகாண ஆட்சியாளரின் மகளான இளவரசி லதிபாவின் புதிய புகைப்படம் அவரது தோழி ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.
துபாய் ஆட்சியாளரும் தமது தந்தையுமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் என்பவரால் தாம் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், தற்போது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டு உலக மக்களிடம் உதவி கோரியவர் இளவரசி லதிபா.
மேலும் 2018ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற முயன்று, அந்த திட்டம் தோல்வியில் முடிந்த பின்னர் இவர் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், லதிபா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்பட்டது.
ஆனால் திடீரென்று, சமீப மாதங்களாக இளவரசி லதிபாவின் புகைப்படங்கள், அதுவும் துபாயில் முக்கிய பகுதிகளில் நண்பர்களுடன் நேரம் செலவிடும் லதிபாவின் புகைப்படங்கள் அவரது தோழி ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள லதிபாவின் புகைப்படத்தில் அவர் மாஸ்க் அணிந்து காணப்படுகிறார். மேலும், அவருடன் இருக்கும் நீண்ட கால தோழியான டெய்லர், தாங்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுமுறையை கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி அவர்கள் இருவரும் பதிவு செய்துள்ள புகைப்படமானது மாட்ரிட் பராஜாஸ் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், இளவரசி லதிபாவுக்கு அவரது கடவுச்சீட்டு கையளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, அவரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக இளவரசி லதிபாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.