அரச குடும்பத்திடம் இருந்து வருமான வரி வசூலிக்க முடிவு: ஐரோப்பிய நாடொன்றில் வாக்கெடுப்பு
நெதர்லாந்து அரச குடும்பத்திடம் இருந்து வருமான வரி வசூலிக்கும் முடிவின் முதல்படியாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
பிரதிநிதிகள் சபையில் ஆதரவு
குறித்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர அரசியலமைப்பில் திருத்தம் தேவைப்படும் என்றே கூறப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
@reuters
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில், இந்த திட்டத்தை நிறைவேற்ற தனிப் பெரும்பான்மை தேவை. மட்டுமின்றி, அதன் பின்னர் இறுதியில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும்.
அரச குடும்பத்திடம் இருந்து வருமான வரி வசூலிக்கும் திட்டத்தின் முன்மொழிவுக்கு பிரதிநிதிகள் சபையில் போதுமான ஆதரவு இருப்பதாகவும், ஆனால் செனட்டில் ஆதரவு நிலை குறைவாகவே உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, செனட்டில் அதிக உறுப்பினர்கள் ஆதரவு கொண்ட BBB முதலில் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், பின்னர் கைவிட்டதாகவே கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த தீவிர வலதுசாரி அரசியல்வாதியான Geert Wilders-ன் தேசியவாத கட்சி வருமான வரி தொடர்பில் புதிய மாற்றங்களை முன்வைத்து வந்துள்ளது.
@reuters
ஆனால் ஆட்சியை கைப்பற்றினாலும் பெரும்பான்மை இல்லை என்பதால், புதிய திட்டங்களை அமுலுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் Mark Rutte வருமான வரி தொடர்பான சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மக்கள் ஆதரவு 55 சதவிகிதமாக சரிவு
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச குடும்பத்தினரிடம் இருந்து வருமான வரி வசூலிப்பதில் ஆதரவு நிலை எடுத்துள்ளனர் என்றே கூறப்படுகிறது. நெதர்லாந்து அரச குடும்பம் பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை வரி செலுத்தாமல் பெற்று வருகிறது.
2024ல் நெதர்லாந்து அரச குடும்பம் மொத்தமாக 11.6 மில்லியன் யூரோ தொகையை பெற்றுள்ளது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவியான இளவரசி அமலியா தமது பங்கான 1.8 மில்லியன் யூரோ தொகையை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் போது அரச குடும்பம் முன்னெடுத்த தேவையற்ற பயணங்களால், 70 சதவிகிதத்தில் இருந்த மக்கள் ஆதரவு தற்போது 55 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது.
மட்டுமின்றி, அரசர் வில்லெம்-அலெக்சாண்டர் மீது 46 சதவிகித மக்கள் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |