ஐரோப்பிய நாடொன்றில் மிகக் கொடூரமானப் படுகொலையில் இருந்து தப்பிய இரு இளவரசிகள்
நெதர்லாந்தில் மிகத் தீவிர வலதுசாரி நபர் ஒருவரின் கொடூரத் தாக்குதல் திட்டத்தில் இருந்து அந்த நாட்டின் இளவரசிகள் இருவர் தப்பியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கைப்பற்றப்பட்ட கோடரிகள்
இந்த விவகாரத்தில் 33 வயதுடைய நபர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். திங்களன்று அந்த நபர் முதற்கட்ட நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.

டச்சு இளவரசிகளான கேத்தரீனா-அமாலியா மற்றும் அவரது தங்கை இளவரசி அலெக்ஸியா ஆகிய இருவரையும் கொல்லத் தீட்டப்பட்ட சதித்திட்டமே அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் சிக்கியுள்ள அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இரு கோடரிகளில் Alexia, Mossad மற்றும் Sieg Heil எனப் பொறிக்கப்பட்டிருந்தது. Sieg Heil என்பது நாஜிக்களால் பயன்படுத்தப்படும் ஒரு வாய்மொழி வணக்கமாகும்.
பிப்ரவரி மாதம் ஹேக் நகரில் அவர் கைது செய்யப்பட்டபோது, Amalia, Alexia மற்றும் bloodbath ஆகிய வார்த்தைகள் எழுதப்பட்ட ஒரு கையெழுத்து குறிப்பு அவரிடம் இருந்து கைப்பற்றியதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அந்த நபர் மேற்கொண்ட இந்தத் திட்டத்திற்கான நோக்கம் குறித்து அதிகாரிகள் தரப்பு தகவலேதும் இன்னும் வெளியிடவில்லை. பாதுகாப்பு குறித்த கவலைகள் இருந்தபோதிலும், டச்சு அரச குடும்பத்தினர் தங்களது கோனிங்ஸ்டாக் அல்லது மன்னர் தினக் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டபடி நடத்தினர்.
தெரு விழாக்களில் கலந்துகொண்டும், நலம் விரும்பிகளை வரவேற்றும், பனிச்சறுக்கு விளையாடியும் அதனை நிறைவு செய்தனர். இந்த தேசிய விடுமுறையானது, மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரின் 59வது பிறந்தநாளைக் குறிக்கிறது.

நெதர்லாந்தின் இளவரசி கேத்தரீனா-அமாலியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2020-ஆம் ஆண்டில், நபர் ஒருவர் அவருக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்து தொடர்ச்சியான செய்திகளை அனுப்பியதை அடுத்து, அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்த கவலைகளின் காரணமாக ஆம்ஸ்டர்டாமில் இருந்த தனது மாணவர் தங்குமிடத்தை காலி செய்ய அவர் நிர்பந்திக்கப்பட்டு, ஹேக்கில் உள்ள பலத்த பாதுகாப்புமிக்க அரச அரண்மனைக்குத் திரும்பினார்.

சாத்தியமான இலக்கு
அந்த மிரட்டல்கள் அத்துடன் முடிந்துவிடவில்லை. போதைப்பொருள் குழுக்களால் தான் கடத்தலுக்கான இலக்காகக் குறிவைக்கப்பட்டிருப்பதாக அஞ்சிய, ஸ்பானிஷ் மொழியைச் சரளமாகப் பேசும் இளவரசி கத்தரீனா-அமாலியா, இறுதியில் நெதர்லாந்தை விட்டு முற்றிலுமாக வெளியேறி, ஒரு வருடகாலம் மாட்ரிட்டில் வசித்தார்.
இந்த நிலையில், போதைப்பொருள் குழு உறுப்பினர்களுக்கு இடையே நடந்த தகவல் தொடர்பை இடைமறித்து ஒட்டுக்கேட்ட அதிகாரிகள், இளவரசி அமாலியா மற்றும் அக்காலகட்டத்தில் நெதர்லாந்துப் பிரதமராகப் பதவி வகித்து வந்த மார்க் ருட்டே ஆகியோரை சாத்தியமான இலக்குகளாகக் குறிவைத்துள்ளதை அறிந்தனர்.

ஆரஞ்சு இளவரசி என்ற பட்டத்தை வகிக்கும் இளவரசி கேத்தரீனா-அமாலியா, அதிகாரிகள் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்திய பின்னர், இறுதியாக 2024-ல் தாயகம் திரும்பினார்.
ஒரு காலத்தில் ஐரோப்பாவின் மிகவும் அஞ்சத்தக்க போதைப்பொருள் கடத்தல் மன்னனாகக் கருதப்பட்ட ரிதுவான் தாகி, இளவரசிக்கு எதிரான சதித்திட்டம் குறித்த எந்தவொரு பின்னணியையும் நிராகரித்தார்.
2024-ஆம் ஆண்டு மரேங்கோ விசாரணையின் முடிவில், ஐந்து கொலைகளுக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புடைய மூன்று கொலைகளைத் தாகி திட்டமிட்டு அரங்கேற்றியதாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |