தலைகீழாக... 27,000 அடி உயரத்தில் சாக விடப்பட்ட நபர்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்
Climbers discover dying mountain guide hanging upside-down: தலைகீழாகத் தொங்கியபடி இறக்கும் தருவாயில் இருந்த மலை வழிகாட்டியை மலையேறுபவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
27,000 அடி உயரத்தில், நள்ளிரவு வேளையில், உலகின் மிக ஆபத்தான மலைப் பாதைகளில் ஒன்றில், மலையேறும் குழுவினர் ஒரு வேதனையான முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டனர்.
புதிய உலக சாதனை
நார்வேயின் மலையேறும் நட்சத்திரமான கிறிஸ்டின் ஹரிலாவும் அவரது குழுவினரும், 2023-ஆம் ஆண்டு கே2 சிகரத்தில் சாதனை படைக்கும் வகையில் ஏறியபோது, இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மலைச் சுமைதூக்குபவரைக் கண்டனர்.

அவர்கள் தங்கள் பணியைக் கைவிட்டு, அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு வர தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டுமா அல்லது புதிய உலக சாதனையைப் படைக்க இன்னும் சில மீற்றர் தூரத்தில் இருக்கும் உச்சியை நோக்கிச் செல்வதா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டியிருந்தது.
அவர்கள் பிந்தையதையே தெரிவு செய்தனர்; இந்த முடிவு ஹரிலாவுக்கு எதிராக மாதக்கணக்கில் நீடித்த சர்ச்சைகள், வசைபாடல்கள் மற்றும் கொலை மிரட்டல்களைத் தூண்டியதுடன், மலையேற்ற உலகில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
தற்போது வெளிவந்துள்ள ஒரு புதிய ஆவணப்படம், இதுவரை வெளிவராத பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதில், ஹரிலாவின் குழுவினர் பாகிஸ்தானிய சுமைதூக்கு வீரரான முகமது ஹசனைக் கண்டுபிடித்த தருணமும், அவரைக் காப்பாற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், இறுதியில் அந்த மீட்புப் பணியைக் கைவிட்டதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
தற்போது 40 வயதாகும் ஹரிலா, உலகின் மிக உயரமான 14 மலைகளையும் ஏறிய மிக வேகமான மலையேற்ற வீரர் ஆனார்; பாகிஸ்தானில் உள்ள கே2 (K2) மலையில் ஏறியதன் மூலம், வெறும் 92 நாட்களில் அவர் இந்தச் சாதனையை நிறைவு செய்தார்.
வெளியாகியுள்ள அந்த ஆவணப்படத்தில், ஹரிலா மலையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தானியரைக் கண்டுபிடித்ததை நினைவு கூர்ந்தார், அவரது கால்களைச் சுற்றி கயிற்றில் ஏதோ சிக்கல் இருந்ததை நாங்கள் பார்த்தோம்.

அவரை நெருங்க தங்களின் குழு கடும் முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மரணித்துக்கொண்டிருக்கும் சுமை தூக்குபவரைச் சென்றடைய முயற்சிக்கும் அக்குழுவினர், இருளில் பனி படர்ந்த மலைச்சரிவில் சிரமப்பட்டு முன்னேறுவதை இப்படம் காட்டுகிறது.
இறுதியில் ஒரு புதிய கயிற்றைப் பயன்படுத்தி ஹசனைப் பாதுகாப்பாக மீட்க அந்த அணியால் முடிந்தது என்று ஹரிலா கூறினார்; ஆனால், அனைவரும் திரும்பிச் செல்வது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மிகவும் ஆபத்தான நிலை
மட்டுமின்றி, அவர்கள் ஹசனை அடைந்தபோது, அவர் ஏற்கனவே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவர் முற்றிலும் உறைந்து போயிருந்தார்.
அவரிடம் ஆக்சிஜன் இல்லை, கையுறைகள் இல்லை, குளிரைத் தடுக்கும் சிறப்பு உடையும் (down suit) இல்லை. நான் அவரைச் சூடுபடுத்தவும், அவரது விரல்களை அசைக்கவும், அவருக்குச் சுடுநீர் கொடுக்கவும் முயன்றேன் என்கிறார் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர், கேப்ரியல்.
இந்த நிலையில், இன்னொரு பேராபத்து அவர்களைச் சூழ்ந்தது. K2 மலையின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றான 'பாட்டில்நெக்' (Bottleneck) பகுதிக்குச் சற்று அப்பால், அதிகாலை சுமார் 3:20 மணியளவில், ஒரு பெரிய பனிச்சரிவு ஒரு செராக் (செங்குத்தான பனிப்பாறை) பகுதியிலிருந்து சரிந்து விழுந்தது.
குழுவின் இரு உறுப்பினர்கள் அப்பகுதியில் ஏற்கனவே முன்னேறிச் சென்றிருந்ததால், தானும் லாமாவும் கேப்ரியலிடமிருந்து பிரிந்து மேலே செல்லத் தொடங்கியதாகவும், அதேவேளையில் அவர் ஹசனுடன் தங்கிவிட்டதாகவும் ஹரிலா விளக்கியுள்ளார்.

ஹசன் ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அவர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதைத் தான் உணர்ந்துகொண்டதாக கேப்ரியல் பின்னர் நினைவுகூர்ந்தார்.
விடிந்ததும், ஹசனைக் காப்பாற்ற மலையேறுபவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை; அவர்கள் மலையேற்றத்தைத் தொடர்ந்தனர். ஹசனை மீட்டுவர முடியாமல் போனதால் ஹர்லா எதிர்கொண்ட வெறுப்பையும், கொலை மிரட்டலையும் அவர் நினைவுகூர்ந்தார்.
மலையேற்றத்தை முடித்துத் திரும்பிய உடனேயே முழு விவரத்தையும் வெளிப்படுத்தாததே அவர்களின் மிகப்பெரிய தவறு என்று அவர் கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து ஹசனின் மரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. ஹசன் பணியாற்றிய நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டியிருந்தது.