ட்ரம்பின் பகீர் திட்டம்... எபோலா பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க நாடொன்றிற்கு அனுப்பப்படும் அபாயம்
எபோலா தொற்றுக்கு இலக்காகும் அமெரிக்கர்கள், அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக கென்யாவில் தனிமைப்படுத்தப்படலாம் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிர்க்கொல்லி நோய்
நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் எனக் கருதப்படும், அறிகுறியற்ற நபர்களுக்காக ஒரு மையத்தை அமைப்பது குறித்து கென்ய அரசாங்கத்துடன் இணைந்து ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில், மோசமடைந்து வரும் எபோலா சுகாதார அவசரநிலைக்கு எதிரான ஒருங்கிணைந்த பன்னாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக,
எபோலா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அறிகுறியற்ற நபர்களுக்கான ஓர் மையத்தை ஒருங்கிணைப்பதற்காக, அமெரிக்க அரசாங்கம் கென்யா அரசாங்கம் மற்றும் பிற நேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கென்யாவும் அமெரிக்காவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுகாதாரக் கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன, இது பல தசாப்தங்களாக அமெரிக்கர்களுக்கும் கென்யர்களுக்கும் பயனளித்து வருகிறது.
தற்போதைய எபோலா பரவல் குறித்த எங்களின் கூட்டு நடவடிக்கை, எங்களின் நீண்டகால ஒத்துழைப்பின் இயல்பான தொடர்ச்சியாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா எனும் உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நோய் அமெரிக்காவிற்குள் நுழைவதை ட்ரம்ப் நிர்வாகம் அனுமதிக்காது என்று வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்கள் வெளிவிவகாரக் கொள்கையின் முதன்மை முன்னுரிமை. எபோலா நோய்த்தொற்று உள்ள எவரையும் அமெரிக்காவிற்குள் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் மார்கோ ரூபியோ குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அரசாங்கம், இந்த நெருக்கடியை அது தற்போது இருக்கும் நாடுகளுக்குள்ளேயே கட்டுப்படுத்த மிகவும் கடுமையாகப் பணியாற்றி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட ஒரு பெரிய எபோலா நோய்ப் பரவல், சுகாதார அதிகாரிகளை எதிர்பாராத விதமாகத் தடுமாறவைத்துள்ளதுடன், ஏற்கனவே 1,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 220 பேர்களின் மரணங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மதபோதக மருத்துவர் ஒருவருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை ஓரளவு சீரடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளரான அவருடைய அமெரிக்க சக ஊழியர், செக் குடியரசின் பிராக் நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கென்யாவில் சிகிச்சை
இதுவரை காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. காங்கோ ஜனநாயகக் குடியரசில் கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரமான புனியாவில் நோய்த்தொற்றுகள் முதன்முதலில் கண்டறியப்பட்டன.
இதனிடையே, வெளியான தகவலின் அடிப்படையில், கென்யாவில் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைப்பதற்காக, முன்னரே தயாரிக்கப்பட்ட உயிரியல் கட்டுப்பாட்டு அலகுகளை (biocontainment units) அந்நாட்டிற்கு எடுத்துச் செல்வது குறித்து சுகாதார அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் 50 படுக்கைகளைக் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைப்பது திட்டம் என்றாலும், தேவைப்பட்டால் இதனை 250 படுக்கைகள் வரை அதிகரிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரையும் ஐரோப்பாவிற்கு மாற்ற அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு, நோயுற்ற எவரும் கென்யாவில் சிகிச்சையளிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வசதி, வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையினால் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் 5,000 அமெரிக்கர்கள் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது; இருப்பினும், உகாண்டாவில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கென்யாவின் தற்காலிக மருத்துவமனையில் சந்தேகத்துக்குரிய நோயாளிகள் எவ்வளவு காலம் தங்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் எபோலாவின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு 21 நாட்கள் வரை ஆகலாம். நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் இந்நோயால் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |