ரஷ்யாவிற்கு 40,000 ராக்கெட்கள் ரகசியமாக அனுப்ப திட்டம்: கசிந்த அமெரிக்க ஆவணங்களில் சிக்கிய முக்கிய நாடு
போருக்கு முன்பாக ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ராக்கெட் அனுப்ப எகிப்து ரகசியமாக திட்டமிட்டு இருந்ததாக சமீபத்தில் கசிந்த அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
40,000 ராக்கெட்கள்
கடந்த வார இறுதியில், மிகவும் ரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ரகசிய ஆவணங்களில் இருந்து அடுத்தடுத்து திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், தற்போது போருக்கு முன்னதாக ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ராக்கெட்டுகளை வழங்க எகிப்து ரகசியமாக திட்டமிட்டு இருந்ததாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.
Sky News
மேலும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி(Abdel Fattah El-Sisi) இதற்காக ஆயுதங்களை உற்பத்தி செய்து, அதை ஏற்றுமதி செய்யவும் உத்தரவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான எகிப்து இத்தகைய ராணுவ ஏற்றுமதியை திட்டமிட்டு இருந்தது மேற்கத்திய நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து ரகசிய திட்டம்
பிப்ரவரி 17 ம் திகதியிட்ட ஆவணத்தின் ஒற்றை பகுதி, ஜனாதிபதி அல்-சிசி மற்றும் மூத்த எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை காட்டுகிறது.
Sky News
அத்துடன் மேற்கத்திய நாடுகளுடன் மோதலை தவிர்க்க, ராக்கெட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்த விவரங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அல்-சிசி ராணுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை என்றாலும், அமெரிக்கா ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மை என அமெரிக்க அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.