லிபியா, கிரேக்கத்தில் எட்டு உடல்கள் கண்டெடுப்பு... அதிகரிக்கும் மத்திய தரைக்கடல் இறப்பு எண்ணிக்கை
லிபியா தலைநகர் திரிபோலி அருகே கரை ஒதுங்கிய ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்களின் உடல்களை பொலிசார் மீட்டுள்ள நிலையில், கிரேக்கத்தில் கிரீட் கடற்கரையில் ஒரு தனி சம்பவத்தில் மூவர் இறந்ததாக அறிவித்துள்ளனர்.
கரை ஒதுங்க வாய்ப்பு
லிபியாவில் உள்ள கடலோர நகரமான காசர் அல்-அக்யாரில் வசிப்பவர்களால் சனிக்கிழமை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உடல்கள் அனைத்தும் கருப்பினத்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் பெண்கள் எனவும் விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒரு குழந்தையின் உடல் கரை ஒதுங்கியதை அப்பகுதி மக்கள் பார்த்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்களை மீட்க ரெட் கிரசெண்டிற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர், உடல்கள் மேலும் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு திரிபோலியில் ஜுவாரா நகரக் கடற்பகுதியில் 55 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட சுமார் 53 புலம்பெயர்ந்தோர் இறந்துவிட்டதாகவோ அல்லது காணாமல் போயுள்ளதாகவோ சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு கூறிய சில வாரங்களுக்குப் பிறகு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது.
இதனிடையே, கிழக்கு மத்தியதரைக் கடலில் நடந்த ஒரு தனி சம்பவம் தொடர்பில் கிரேக்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சனிக்கிழமை கிரீட் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற மரப் படகு கவிழ்ந்ததில் அதிகாரிகள் மூன்று சடலங்களை மீட்டுள்ளதுடன் குறைந்தது 20 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு
உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலோர் எகிப்தியர்கள் மற்றும் சூடானியர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய எல்லை முகமையான ஃபிரான்டெக்ஸின் நான்கு ரோந்து படகுகள், ஒரு விமானம் மற்றும் இரண்டு கப்பல்கள் மூலம் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மரப் படகில் சுமார் 50 பேர் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். சுமார் 40 புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது படகு அந்தப் பகுதியில் காணப்பட்டது, இது மற்றொரு மீட்பு நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான கடலை கடக்க முயற்சிக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளால் முயம்மர் கடாபி 2011ல் வீழ்த்தியதன் பிறகு, மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் மக்களுக்கான போக்குவரத்துப் பாதையாக லிபியா மாறியுள்ளது.
கடந்த வாரம், லிபியாவில் இளம் பெண்கள் உட்பட குடியேறிகள் கொல்லப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல், பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல் அல்லது வீட்டு அடிமைத்தனத்தில் தள்ளப்படுதல் போன்ற அபாயங்கள் இருப்பதாக ஐ.நா. அறிக்கை ஒன்று கூறியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |