விவசாயிகளின் தக்காளிகளைச் சாப்பிட்டதால் பலியான 15 யானைகள்: வெளியான பகீர் பின்னணி
கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைகளில் தக்காளிகளைச் சாப்பிட்டதால் 15 யானைகள் மரணமடைந்துள்ளன.
கென்யாவின் அம்போசெலி தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைகளில் தக்காளிப் பழங்களைச் சாப்பிட்ட பிறகு, 15 யானைகள் இறந்த நிலையில் அது சயனைடு நச்சுத்தன்மையால் நடந்ததாகக் கூறப்படுகிறது.
தக்காளிப் பழங்களால்
காட்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளும் இணைந்து வாழும், பண்ணைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் பயிரிடப்படும் ஒரு சூழலில் சயனைடு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், தங்கள் தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டதால் யானைகள் பலியானதாக வெளியாகியுள்ளத் தகவலை விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.
அம்போசெலி பூங்காவிற்கு அருகில் விரிவடையும் விவசாய நடவடிக்கைகளால் இப்பகுதியில் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளின் இறப்புகளும் அதற்கான காரணங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளும் கவலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
வேட்டையாடுதலைக் குறைத்து யானைகளைப் பாதுகாப்பதன் மூலம், வரலாற்று ரீதியாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலிருந்த தங்கள் யானை இனத்தின் எண்ணிக்கையை 36,000-க்கும் அதிகமானதாக மீண்டும் உயர்த்தியதற்காக, சமீப காலம் வரை கென்யா பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது.
அம்போசெலி சூழல் மண்டலத்தில் ஒரு மாத காலத்திற்குள் 15 யானைகள் மரணமடைந்ததாகக் கென்யா வனவிலங்கு சேவை அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது.
முதற்கட்ட ஆய்வகப் பரிசோதனைகளில் சயனைடு கண்டறியப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனைகளில் விலங்குகளின் வயிற்றில் தக்காளிகள் இருப்பது தெரியவந்தது.
மருத்துவர்கள் தெரிவிக்கையில், யானைகள் இறப்பதற்கு முன், பக்கவாதம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாய நிலங்கள்
ஆரம்பகட்ட சோதனைகள் சயனைடு நச்சுத்தன்மையைக் சுட்டிக்காட்டின; இருப்பினும், சயனைடின் செறிவை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வகச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அம்போசெலியின் எல்லையில் அமைந்துள்ள கிமானா, கென்யாவின் மிகச் சிறந்த விவசாயப் பகுதிகளில் ஒன்றாகும்; இங்கு விளையும் தக்காளி, வெங்காயம் மற்றும் பிரெஞ்சு பீன்ஸ் ஆகியவை தலைநகர் நைரோபியில் உள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
கென்யாவின் தேசிய யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி, பூங்காவிற்கு அருகில் விவசாய நிலங்கள் விரிவடைந்துள்ள நிலையில், வேட்டையாடுதலுக்கு அடுத்தபடியாக மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலே உயிரிழப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகத் தொடர்கிறது.

2000 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், தங்கள் பயிர்கள், உடைமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் சமூகங்கள் மேற்கொண்ட தற்காப்பு அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளால் குறைந்தது 1,160 யானைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் விவசாய இடுபொருட்களிலிருந்து சயனைடு வந்திருக்கக்கூடும் என்பதில் விவசாயிகளுக்குச் சந்தேகம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |