நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்... உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் எலான் மஸ்க் பதிவால் பரபரப்பு
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை மர்மமான முறையில் இறந்துவிட்டால், இதை பற்றி அறிவது சுவாரசியமாக இருக்கும்ல’ என பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரின் உரிமையாளராக மாற இருக்கும் எலான் மஸ்க்கின் உயிருக்கு ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. உக்ரைனுக்கு உதவியதற்காக எலான் மஸ்க்கிற்கு ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரியில், உக்ரைனில் எலான் மஸ்க் உதவியுடன் அவருக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை செயல்படுத்தப்பட்டது.
இதே போன்ற பல உதவிகளை அவர் உக்ரைனுக்கு செய்தார். இந்த டுவீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷ்ய மொழியில் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ‘உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022