ஈரானின் ட்ரோன் தாக்குதல்... ஐக்கிய அமீரகத்தில் கைதாகியுள்ள 70 பிரித்தானியர்கள்
ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக 70 பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 வருடங்கள் வரையில்
சுற்றுலாவுக்கு சென்றவர்கள், விமான ஊழியர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பிரித்தானியர்கள் என கிட்டத்தட்ட 70 பேர்கள் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர்.

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 10 வருடங்கள் வரையில் சிறைத்தண்டனை உறுதி என்றே தெரிய வருகிறது.
பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம் என கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை பாதுகாக்க ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணம் கடுமையாக போராடி வருவதாகவே கூறப்படுகிறது.
போர் சேதங்கள் தொடர்பிலான புகைப்படங்கள் மூன்றாவது நபரால் பெற்றுக்கொள்வதும் சட்டத்திற்கு புறம்பானது என்றே கூறப்படுகிறது. இப்படியான குற்றங்களுக்கு 10 வருடங்கள் வரையில் சிறை அல்லது 200,000 பவுண்டுகள் வரையில் அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய அமீரக சட்டத்தரணிகளுடன் பிரித்தானியாவின் இரண்டு குழுக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிவரும் தகவலின் அடிப்படையில், தற்போது கைது செய்யப்படுவோர் பல மாதங்கள் விசாரணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் மீது வழக்குகள் பதியப்படும்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் - ஆனால், அவர்கள் அமீரகத்தை விட்டு வெளியேற இயலாத வகையில், அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்து, இதற்கிடையில் அவர்களின் பணி விசாக்கள் காலாவதியாகிவிட்டால், அவர்களால் பணியாற்ற இயலாமற்போவதுடன், வீடற்ற நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
துபாயில் 240,000 பிரித்தானியர்கள்
துபாய் மாகாணத்தில் மட்டும் 35 பிரித்தானியர்கள் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அண்டை மாகாணமான அபுதாபியில் இதேபோன்ற ஒரு எண்ணிக்கையில் பிரித்தானியர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அனைத்து கைது நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அலுவலகத்திற்குத் தானாகவே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. கைது செய்யப்பட்டவர்களில் சிலர், பிரித்தானிய தூதரகத்தைத் தொடர்புகொண்டால் தங்கள் வழக்குகள் நீண்டுவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியர் ஒருவரின் அலைபேசியில் துபாய் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று காணப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு தற்போது 40,000 பவுண்டுகள் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் எதிர்கொள்கிறார்.
போருக்கு முன்பு, 240,000-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் துபாயில் வசித்து வந்தனர். ஈரான் ஐக்கிய அரபு அமீரகம் மீது ட்ரோன்களை ஏவத் தொடங்கியதிலிருந்து, அவர்களில் சுமார் பாதிப் பேர் நாடு திரும்பியிருப்பதாகக் கருதப்படுகிறது.
லண்டனில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் தெரிவிக்கையில், சம்பவ இடங்களிலிருந்து புகைப்படங்களை பதிவு செய்வது அல்லது பகிர்வது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |