இரண்டு மாதம் வாட்டியெடுத்த வெப்ப அலை... பிரித்தானியாவில் 2,700 பேர்கள் மரணம்
ஜூன் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளைப் பாதித்த வெப்ப அலை, அதன் உச்சக்கட்டமாக இருந்த மூன்று நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 440 பேர்களின் உயிரைப் பறித்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை
ஜூன் மாதம் மொத்தம் நிலவிய வெப்ப அலை மற்றும் மே மாதத்தில் ஏற்பட்ட ஒரு வெப்ப அலை ஆகியவற்றின் காரணமாக, சுமார் 2,700 பேர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.

காலநிலை நெருக்கடியால் தீவிரமடைந்து வரும் கடும் வெப்பத்தின் ஆபத்தை இந்தத் தரவுகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
வெளியாகியுள்ள ஆய்வுகலின் அடிப்படையில், மனித நடவடிக்கைகளால் இதுவரை ஏற்பட்டுள்ள 1.4 டிகிரி செல்சியஸ் அளவிலான புவி வெப்பமடைதல் இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிய வந்துள்ளது.
ஒப்பீட்டளவில் பார்த்தால், அரசுப் புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துகளால் நாளொன்றுக்கு சுமார் நான்கு பேரும், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் நாளொன்றுக்கு சுமார் 35 பேரும் மரணமடைகின்றனர்.
ஜூன் மாத வெப்ப அலை உச்சக்கட்டத்தின் விளைவாக, இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமையும் வானிலை ஆய்வு மையமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கைகளை விடுத்தன.
இது அனைவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்தாலும், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தால் இளையோர், முதியோர் மற்றும் ஏற்கனவே நோய் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக அறிவித்திருந்தது.
2020 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், கோடைக்கால வெப்ப அலைகளால் பிரித்தானியாவில் 10,000-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாக UKHSA முன்பு கண்டறிந்தது.
இதனிடையே, வேகமாக மோசமடைந்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று பருவநிலை மாற்றக் குழு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எச்சரித்து வருகிறது.
கூடுதல் வெப்பம்
ஜூன் மாதத்தில் நிலவிய வெப்ப அலை ஐரோப்பாவில் இதுவரை பதிவானவற்றிலேயே மிகவும் பரவலானதாகவும் தீவிரமானதாகவும் இருந்தது; இது 20,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மே மாத வெப்ப அலையின்போது மேற்கு லண்டனில் அதிகபட்சமாக 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது; அதேவேளையில், ஜூன் மாதத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக சாதனை அளவிலான வெப்பநிலைகள் நிலவிய சூழல், கிழக்கு ஆங்லியாவில் 37 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது.

2026 மே 21 முதல் 29 வரை நீடித்த மே மாத வெப்ப அலைக் காலத்தில், வெப்பம் தொடர்பான காரணங்களால் 550 பேர் மரணமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர்கள், பருவநிலை நெருக்கடியால் ஏற்பட்ட கூடுதல் வெப்பத்தின் விளைவாக மரணமடைந்துள்ளனர். மேலும், ஜூன் 24-26 வரையிலான உச்சக்கட்ட வெப்ப அலை காலகட்டத்தை உள்ளடக்கிய, ஜூன் 18 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,200 வெப்ப மரணங்கள் நிகழ்ந்ததாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |