இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்... பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிக்கை
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதோடு போட்டியானது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்திலும், லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் ஓவலில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருக்கிறது.
மான்செஸ்டரில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்க தயாராக இருந்தது. ஆனால் 4-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 59 வயது ரவிசாஸ்திரிக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதனால் இந்திய அணியினர் யாரும் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஐந்தாவது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிசிசிஐ அறிக்கையில், பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் இடையிலான வலுவான உறவுக்கு மத்தியில், ரத்து செய்யப்பட்ட போட்டியை மீண்டும் வேறு நாளில் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ பரிந்துரைக்கிறது.
இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் வேறு நாளில் நடத்துவது குறித்து விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.