இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வலுவான வீரர்கள் உள்ளனர்! பிரபல ஜாம்பவான் அளித்துள்ள பேட்டி
இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு இங்கிலாந்து அணியில் வலுவான வீரர்கள் உள்ளனர் என ஆண்டி ப்ளவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 5ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது.
இந்த தொடர் குறித்து ஜிம்பாப்வே முன்னாள் வீரரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ஆன்டி பிளவர் கூறுகையில், அவுஸ்திரேலியாவுக்கு பயணித்து அங்கு வெற்றிக்கு முயற்சிப்பது வேறு.
ஆனால் இந்திய மண்ணில் 4 டெஸ்டுகளில் விளையாடுவது முற்றிலும் வேறுவகையிலான சவால் நிறைந்தது. 2012-ம் ஆண்டில் அலஸ்டயர் குக் தலைமையில் இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதை விட இப்போது இங்கிலாந்துக்கு இந்த தொடர் கடினமாக இருக்கப்போகிறது.
இந்த தொடரில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என்பதை முன்கூட்டியே சொல்வது சரியாக இருக்காது. இருப்பினும் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த வீரர்களை கொண்டிருக்கிறது.
இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு இங்கிலாந்து அணியில் வலுவான வீரர்கள் உள்ளனர்.
அவர்களால் இந்திய மண்ணில் தடுமாற்றமின்றி விளையாடவோ அல்லது வெற்றிக்குரிய சூழலை உருவாக்கவோ முடியும். போட்டிக்குரிய நாளில் கடினமான வாய்ப்புகளை நட்சத்திர வீரர்கள் எப்படி சாதகமாக மாற்றுகிறார்கள் என்பதை பொறுத்தே எல்லாம் அமையும்.
மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தனித்துவமான திறமையை காட்டும் வியப்புக்குரிய சில வீரர்கள் இங்கிலாந்து அணியில் உள்ளனர் என கூறியுள்ளார்.