எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரதமர் மோடியின் பெயர்: கேவலத்தின் உச்சம் என காங்கிரஸ்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது மிகவும் வெட்கக்கேடானது என காங்கிரஸ் கட்சி கடுமையாக தாக்கியுள்ளது.
நற்பெயருக்கு களங்கம்
அத்துடன், இது தேசிய கெளரவம் சார்ந்தது என்றும் சர்வதேச நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரு விடயமெனவும், இதற்கு பாஜகவின் உயர்மட்டத் தலைவர் பதிலளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ஆவணங்களில், எப்ஸ்டீனிடம் இருந்து மோடி பெற்றுக்கொண்ட அந்த ஆலோசனை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் பெயர் பலமுறை இடம்பெற்றுள்ளது. இதனால் பல கேள்விகளும் எழுந்துள்ளது.
இது இன்னும் அவமானகரமாக மாறி வருகிறது. பிரதமரின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் உத்தியோகப்பூர்வ சமூக ஊடகத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஒரு மின்னஞ்சல் நகலை இணைத்துள்ளனர். 2017 ஜூலை 9ம் திகதி அனுப்பப்பட்டுள்ள அந்த மின்னஞ்சலில், பிரதமர் மோடி எப்ஸ்டீனிடம் இருந்து ஆலோசனைகள் பெற்றுள்ளதாகவும், அமெரிக்க ஜனாதிபதிக்கு (டொனால்ட் ட்ரம்ப்) நன்மை பயக்கும் வகையில் இஸ்ரேலில் பிரதமர் மோடி நடனமாடிப் பாட்டும் பாடினார் என குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 4 முதல் 6 வரை பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் சென்று வந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, மோடிக்கு ஆலோசனை வழங்குவது குறித்து எப்ஸ்டீன் எழுதியதாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு என்ன தொடர்பு
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மிகவும் ஆழமான மற்றும் நீண்டகாலத் தொடர்பு உள்ளது என்பது இதனால் தெளிவாகியுள்ளது, இது இந்தியாவுக்கு அவமானகரமானது என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களே, நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது: ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் உங்களுக்கு என்ன தொடர்பு? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இன்னொரு தலைவரான பவன் கேரா குறிப்பிடுகையில், 2019 தேர்தல்களுக்குச் சற்று முன்பு, மோடி எப்ஸ்டீன் போன்ற ஒரு கேவலமான அமெரிக்கரை ஏன் சந்தித்தார்?

வாஷிங்டனில் யாரும் அவருடன் பேச விரும்பாத நிலையில், மோடி அமெரிக்காவுடனான தனது நட்பு குறித்து நாட்டு மக்களிடம் ஏன் பொய் சொன்னார்?
கல்வான் மோதல் நடந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் தனது பிரதான எதிரியாக குறிப்பிடும் சீனாவுக்கு ஏன் நற்சான்றிதழ் வழங்கினார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |