இது தொடக்கம் தான்... எரிமலை வெடிப்பு தொடரும்: புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கோ நாட்டில் கடலுக்கடியில் எரிமலை வெடித்துச் சிதறியதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்கியது, உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
குறித்த பகுதியில் இது போன்ற எரிமலை வெடிப்பு தொடரும் என புவியியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடு டோங்கோ. இங்குள்ள ஹங்காஹபாய் மற்றும் ஹங்காடோங்கா தீவுகளில் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்படும். இங்கு கடல் மட்டத்தில் இருந்து, 300 அடி உயரமுள்ள ஒரு எரிமலை உள்ளது.
ஆனால் கடலுக்கு அடியில் 5,900 அடி உயரமும், 20 கி.மீ.துாரத்துக்கும் மிகப் பெரிய எரிமலையாக பரந்து விரிந்திருந்தது. இந்த எரிமலை தான் சமீபத்தில் வெடித்து சிதறியது.
இதன் தொடர்ச்சியாக டோங்கோவில் உள்ள குட்டித் தீவுகளை சுனாமி அலை தாக்கியது. இது குறித்து புவியியல் நிபுணர்கள் தெரிவிக்கையில், வழக்கமாக கடலுக்கடியில் இருக்கும் எரிமலைகள் வெடிக்கும்போது பாறைக் குழம்புகள் கடல் நீரில் படும்போது, அந்த சூட்டில் ஆவி உருவாகி, பாறைக் குழம்புகளின் வெப்பத்தை தணிக்கும்.
1,200 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருந்தாலும், எரிமலைக் குழம்பை கடல் நீர் தணிய வைத்துவிடும். ஆனால் தற்போது எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஒரே நேரத்தில் நிறைய எரிமலைக் குழம்பு உருவானதால், அதை உடனடியாக தணிக்க முடியவில்லை.
அந்தக் குழம்புகள் மீண்டும் எரிமலை பள்ளத்துக்குள் சென்று வெடிப்பை அதிகரித்துள்ளன. இது போன்ற சம்பவம் 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். டோங்கோவில் அடுத்த சில ஆண்டுகளில் இது போன்ற தொடர் எரிமலை வெடிப்புகள் ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே எரிமலை வெடிப்பு காரணமாக பசிபிக் கரையோர பகுதிகளில் சுனாமி அலைகள் எழுவது குறைந்துள்ளது. இருப்பினும் கடல் பகுதியில் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.