இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது இளைஞர்: யார் அவர்?
எதிரியம் கிரிப்டோகரன்சியின் இணை நிறுவனரான 27 வயது இளைஞர் விட்டாலிக் பூட்டரின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை வழங்கியுள்ளார்.
கொரோனாவின் 2-ம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
கூகுள் நிறுவனம் ரூ.135 கோடியும், டுவிட்டர் ரூ.110 கோடியும் அறிவித்தன. இது போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகளுக்கு நன்கொடை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் எதிரியம் கிரிப்டோகரன்சி இணை நிறுவனர் விட்டாலிக் ரூ.7,300 கோடி நன்கொடை அறிவித்துள்ளார். ரஷ்யாவில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவரான விட்டாலிக் தனது 19 ஆவது வயதில் எதிரியம் கிரிப்டோகரன்சியை உருவாக்கினார்.
சிறந்த புரோகிராமரான இவர் பணப்பரிவர்த்தனையில் வங்கிகளிடம் அதிகாரம் செல்லாமல், அவை பணம் புழங்கக் கூடிய மக்களிடமே பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கியுள்ளார்.
ஒரு எதிரியத்தின் இன்றைய இந்திய மதிப்பு ரூ.2.92 லட்சம் ஆகும். இவர் 500 எதிரியம் மற்றும் 50 டிரில்லியன் ஷிப் நாணயங்களை நன்கொடை அளித்துள்ளார். இதன் மொத்த மதிப்பு 1.14 பில்லியன் டொலர் என கூறப்படுகிறது.