நாடொன்றிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய தடை: உள்நாட்டு யுத்தப் பின்னணி
ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
தங்கம் இறக்குமதி செய்ய தடை
ஆப்பிரிக்க நாடுகளிலேயே, அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சூடானும் ஒன்று.

விடயம் என்னவென்றால், சூடானில் 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல், ராணுவத்துக்கும், போராளிக்குழுவான Rapid Support Forces (RSF) என்னும் அமைப்புக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுவருகிறது.
யுத்தம் காரணமாக, 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பியோட நேர்ந்துள்ளது. கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துவருகின்றன.
இந்த இரு பிரிவினரும், நாட்டிலுள்ள தங்கச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். நாட்டின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் உள்ள தங்கச் சுரங்கங்களை RSFஅமைப்பும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தங்க உற்பத்தியை ராணுவமும் கட்டுப்படுத்துகின்றன.
ஆக, இருதரப்பும் போர் செய்வதற்குத் தேவையான பணம், இந்த தங்க ஏற்றுமதி மூலம்தான் கிடைக்கிறது.
ஆகவே, சூடானிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சூடானில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில், யுத்தத்துக்கான முக்கிய நிதி ஆதாரமாக தங்கம்தான் விளங்குகிறது.
ஆகவே, சூடானிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தால், அது வன்முறைக்குக் காரணமாக இருப்போருக்கு பணம் கிடைப்பது குறைய வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடை நடவடிக்கைகள், யுத்தத்துக்கு நிதி வழங்கும் ஆதாரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், யுத்தத்தை தூண்டுவோர் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |