நாளுக்கு ரூ 8 கோடி அபராதம்... புகலிடக் கொள்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் சிக்கிய ஹங்கேரி
ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கொள்கைகளை பின்பற்ற மறுப்பதாக குறிப்பிட்டு, ஒன்றியத்தின் முதன்மை நீதிமன்றம் ஹங்கேரிக்கு 200 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.
சட்டங்களை மீறியது
அத்துடன் ஹங்கேரி தற்போது பின்பற்றும் கொள்கைகளை மாற்றும் வரையில் நாளுக்கு 1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ 8 கோடி) தண்டம் விதிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவிக்கையில், ஹங்கேரி 2020 நீதிமன்ற தீர்ப்பை மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், புகலிடக் கோரிக்கையாளர்களை ஹங்கேரிக்குள் நுழைவதற்கான பயண அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு பெல்கிரேட் அல்லது உக்ரைன் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதன் மூலம் அது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மீறியது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து ஹங்கேரிக்கு 200 மில்லியன் யூரோ அபராதமாக விதித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஹங்கேரி பிரதமர் Viktor Orbán, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையை பாதுகாத்ததற்காக விதிக்கப்பட்ட அபராதம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய குடிமக்களைவிடவும் சட்டவிரோத குடியேறிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2015ல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டிற்குள் நுழைந்ததிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து புலம்பெயர்வோர் மீது ஹங்கேரி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
உரிமையை மதிக்கவில்லை
பெரும்பாலானோர் சிரியாவில் இருந்து போருக்கு பின்னர் வெளியேறியவர்கள் என்றே கூறப்படுகிறது. ஹங்கேரிய அரசாங்கம் எல்லை வேலிகளை அமைத்து பலரை கடக்க விடாமல் தடுக்கவும் முயன்றது.
ஐரோப்பிய ஒன்றிய விதிகள் என்பது தங்கள் சொந்த நாட்டில் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கும் எவருக்கும் சர்வதேச பாதுகாப்பைக் கேட்க உரிமை உண்டு. மட்டுமின்றி, மரணம் அல்லது சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் அபாயம் இருந்தால் அவர்களது குடியிருப்பில் இருந்தும் அவர்களை வெளியேற்ற முடியாது.
அத்துடன், அடைக்கலம் கோரி விண்ணப்பித்தவர்களை ஹங்கேரி சட்டவிரோதமாக கைது செய்துள்ளதுடன், அவர்களின் விண்ணப்பத்தின் மீதான மேல்முறையீடு தீரும் வரை ஹங்கேரியில் தங்குவதற்கான அவர்களின் உரிமையை மதிக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டவிரோத புலம்பெயர் மக்களை கண்டிப்பாக ஏற்பதில்லை என்று ஹங்கேரி உறுதிபட தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |