ரஷ்யாவுடன் மோதல் வெடிக்கும் எதிரொலி.. உக்ரைனுக்கு பெரும் தொகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இலக்கு
ரஷ்யாவுடனான மோதலின் விளைவுகளை குறைக்க உக்ரைனுக்கு 1.2 பில்லியன் யூரோ நிதி உதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இலக்கு வைத்துள்ளது.
திங்களன்று பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, உக்ரைனுக்கு புதிய அவசரகால மேக்ரோ-நிதி உதவியாக 1.2 பில்லியன் யூரோ வழங்க ஆணையம் முன்மொழிகிறது.
இந்த நிதி உதவி அவசரகால கடன்கள் மற்றும் மானியங்கள் ஆகிய இரண்டையும் கொண்டதாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியானது, உக்ரைன் மோதல் காரணமாக அதன் விரைவான நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய இப்போது உதவுவதற்காக என Ursula கூறினார்.
முதல் தவணையான 600 மில்லியன் யூரோக்களை விரைவாக வழங்குவதற்காக, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எம்.பி-க்கள் அவசரகால ஆதரவை விரைவில் அங்கீகரிக்க வேண்டும் என்று தான் எண்ணுவதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நிதியம் (IMF) போன்ற சர்வதேச கூட்டாளிகள் இதே அணுகுமுறையைப் பின்பற்றி உக்ரைனுடனான தங்கள் ஈடுபாட்டைப் புதுப்பிக்குமாறு Ursula அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பிய ஆணையமே, இந்த ஆண்டு உக்ரைனுக்கான மானியங்களில் அதன் இருதரப்பு உதவியை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட 160 மில்லியன் யூரோக்களுக்கு மேல் மேலும் 120 மில்லியன் யூரோக்களை சேர்க்கும் என கூறினார்.
2014 ஆம் ஆண்டு முதல், ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டது மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றியபோது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் 17 பில்லியன் யூரோக்களுக்கு மேல் மானியங்கள் மற்றும் கடன்களை அந்நாட்டிற்கு ஒதுக்கியுள்ளன என்று Ursula von der Leyen குறிப்பிட்டுள்ளார்.