பெல்ஜியத்தில் தொடங்கும் ஐரோப்பிய உச்சி மாநாடு: உக்ரைனுக்கு அந்தஸ்து கிடைக்குமா?
பெல்ஜியத்தில் இன்று தொடங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாட்டில் உக்ரைனை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், பாதிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டிற்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து ஐரோப்பிய ஒன்றியம், தமது உறுப்பு நாடாக உக்ரைனை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு நாட்கள் உச்சி மாநாடு, இன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் 27 உறுப்பு நாடுகள் உக்ரைனை வேட்பாளராக அங்கீகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விண்ணப்பித்திருந்தது. அந்நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உக்ரைன் உறுப்பு நாடாக சேரும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும்.
'27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் எங்கள் வேட்பாளர் நிலையை ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன். இது இருளில் இருந்து வெளிச்சத்திற்குச் செல்வது போன்றது' என உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த ஜூன் 22 அன்று வீடியோ இணைப்பு மூலம் டொராண்டோவில் மாணவர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.