ஐரோப்பாவின் இறுதி... ஆபத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமானது முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனவும் பேரழிவைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.
உக்ரைனின் ஜாபோரிஜியா பகுதியில் அமைந்துள்ளது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம். குறித்த அணுமின் நிலையத்தை ரஷ்யா பிப்ரவரியில் படையெடுப்பைத் தொடர்ந்து கைப்பற்றியது.
ஆனால் தற்போது பராமரிப்பு பணிகள் எதும் முன்னெடுக்க முடியாத சூழலில், குறித்த அணுமின் நிலையத்தில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டால், அது ஐரோப்பாவின் இறுதிகட்டத்திற்கு வழிவகுக்கும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு விளாடிமிர் புடினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவரான Rafael Grossi.
அணுமின் நிலையத்திற்கு என குறிப்பிட்ட பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும், அதை பின் பற்ற வேண்டும் என்பது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்கனவே செர்னோபிலில் செய்தது போல் பழுதுபார்ப்பதற்கும் உதவுவதற்கும் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஜபோரிஜியாவில் விபத்து ஏற்பட்டால், இயற்கைப் பேரழிவைக் குறை கூற முடியாது எனவும் முழு பொறுப்பும் நாம் மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நடக்கும் பகுதியில் குறித்த அணுமின் நிலையம் அமைந்துள்ளது எனவும், மார்ச் மாதம் ரஷ்ய தாக்குதலுக்கு குறித்த அணுமின் நிலையம் இலக்கானது எனவும் Rafael Grossi குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜபோரிஜியாவில் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் தீப்பிழம்பானது ஆறு செர்னோபில் விபத்துக்கு ஒப்பானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, குறித்த அணுமின் நிலையத்தை தங்களின் பாதுகாப்பு கவசமாக ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும், அங்கிருந்து உக்ரைன் துருப்புகளை ரஷ்யா தாக்கிவருவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் பதில் தாக்குதலை முன்னெடுக்க முடியாது என்பது ரஷ்யாவுக்கு தெரியும் என்றே அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. 1986 ஆம் ஆண்டில், செர்னோபில் ஆலையில் ஒரு அணு உலை வெடித்ததில், வடக்கு உக்ரைன் உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவின் தளமாக மாறியது.
இந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகருக்கு வடக்கே 65 மைல் தொலைவில் உள்ள செர்னோபிலையும் கைப்பற்றின, ஆனால் ஐந்து வாரங்களுக்குப் பிறகு பின்வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது.