கடும் வெப்ப அலையில் தகிக்கும் ஐரோப்பா... மருத்துவ சேவைகள் ஸ்தம்பிக்கலாம் என எச்சரிக்கை
முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்ப அலையை ஐரோப்பா எதிர்கொண்டுள்ள நிலையில், மருத்துவ சேவைகள் ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிரைப் பறிக்கும் வகை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொது இடங்களில் மது அருந்துவதை பிரெஞ்சு அதிகாரிகள் தடை செய்துள்ளனர். மேலும் மருத்துவமனைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழக்கிழமையன்று ஐரோப்பா முழுவதும் உயிரைப் பறிக்கும் வகையிலான வெப்ப அலை நிலவிய நிலையில், பாரிஸ் நகர சுகாதாரத் துறை அதிகாரிகளின் எச்சரிக்கைகளை இது எதிரொலித்துள்ளது.
குறைந்தது 101 மில்லியன் ஐரோப்பிய மக்கள் 35 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளனர். வரலாறு காணாத வெப்ப அலையால் ஏராளமானோர் மரணமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடுமையான வெப்பம் காரணமாக முதியவர்களும் நோயாளிகளும் பாதிப்புக்கு உள்ளானதால், அவசர உதவிக்கான அழைப்புகள் மற்றும் மருத்துவமனைக்கு விரையும் மக்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிர வெப்பநிலையால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் அதன் முழு கொள்ளளவை எட்டும் நிலையை நெருங்கிக்கொண்டிருப்பதாக பாரிஸ் காவல் துறைத் தலைவர் பேட்ரிஸ் ஃபார் (Patrice Faure) கூறியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கடும் வெப்பம் காரணமாக பாரிஸில் புதன்கிழமை அன்று 24 மணி நேரத்தில் 25 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது பதிவாகியுள்ளது.
தேசிய அளவில், வெப்பம் தொடர்பான காரணங்களுக்காக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஸ்டெஃபனி ரிஸ்ட்டின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புதன்கிழமை நிலவிய கடும் வெப்பம் காரணமாக, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உயிருக்கு ஆபத்தான அவசர அழைப்புகள் வந்ததாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

ஜேர்மானிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் ஐரோப்பிய கூட்டு ஆராய்ச்சி மையத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணிப்புகளின் அடிப்படையில் AFP செய்தி நிறுவனம் செய்த கணக்கீடுகளின்படி, 380 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 30 டிகிரி செல்சியஸ்க்கும் மேற்பட்ட வெப்பநிலையை எதிர்கொள்வார்கள் என்று தெரியவந்தது.
வரலாற்றிலேயே முதல் முறை
இதனிடையே, ஜூன் மாதத்தில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ள ஸ்பெயினில், ஞாயிறு முதல் புதன் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 212 மரணங்கள் வெப்பத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என இறப்பு விகிதங்களைக் கண்காணிக்கும் மோமோ அமைப்பு தெரிவித்துள்ளது.
வெப்ப அலை காரணமாக இரண்டு விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு கட்டிடத் தொழிலாளி உட்பட ஐந்து பேர் மரணமடைந்ததாக இத்தாலிய செய்தித்தாளான கொரியேரா டெல்லா செரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில், வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருந்து, வார இறுதிக்குள் 40 டிகிரி செல்சியஸை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டதால், பல வெளிப்புற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

சுவிட்சர்லாந்து ஜூன் மாதத்திற்கான 38 டிகிரி செல்சியஸ் என்ற சாதனை வெப்பநிலையைப் பதிவு செய்த அதே வேளையில், நெதர்லாந்து நிர்வாகம் தனது வரலாற்றிலேயே முதல் முறையாக வெப்பம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தின் யோவில்டனில் வியாழக்கிழமையன்று வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸை எட்டியது; இது ஜூன் மாதத்தில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.
மேற்கு ஐரோப்பாவில் வெள்ளிக்கிழமை முதல் வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார இறுதியில் வெப்பநிலை உயர்ந்ததால் கிழக்கு ஐரோப்பா கடும் அபாய எச்சரிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |